அறிவின் ஆயுதமான புத்தகத்தை கொண்டாட வேண்டும்
'உலக புத்தக தினம்' நேற்று உலகளவில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், எந்த ஒரு ஆரவாரமும் இன்றி நம் நாட்டிலும், பலரும் தங்களின் நண்பர்களுக்கு புத்தகங்களை வாங்கி கொடுத்தனர். புனித தினமான உலக புத்தக தினம் குறித்த ஓர் பார்வை.'ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால், அவனை காட்டுங்கள்; அவனே என் வழிகாட்டி' என்றார் ஜூலியஸ் சீசர். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று காந்தியிடம் கேட்ட போது, 'நூலகம் கட்டுவேன்' என்று, சற்றும் யோசிக்காமல் அவர் பதிலளித்தார்.தான் சாகப்போகும் சிறிது நேரத்திற்கு முன்னர் வரை கூட, சிறைக்குள் இருந்தபடியே புத்தகம் படித்தவர் புரட்சியாளர் பகத்சிங். இது போன்ற சம்பவங்கள் மற்றும் பொன்மொழிகள் மூலம் புத்தகத்தின் முக்கியத்துவத்தை அறியலாம்.சமத்துவம் உலகத்தின் எந்த மூலையில் வாழும் மக்களின் கலாசாரம், பாரம்பரியம், வாழ்க்கை முறை, வரலாறு போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் ஒரே தோழன் புத்தகம் மட்டுமே. பகவத்கீதை, குரான், பைபிள் போன்றவற்றை அருகருகே வைத்தாலும், அவை ஒரு போதும் அடித்துக் கொள்வதில்லை. புத்தகங்கள் சமத்துவம், சகோதரத்துவத்தை போதிக்கின்றன.காலம் மாறினாலும், காட்சிகள் மாறாது என்பது போல, 'டிஜிட்டல்' உலகிலும் வாசிப்பு பழக்கம் அழியாமல் இருக்கிறது. இன்றைக்கும் அச்சில் இல்லாத பழைய புத்தகங்களை தேடிக்கொண்டிருக்கும் வாசகர்கள் ஏராளம். புத்தகங்களை ஆபரணங்களை போல பாதுகாப்போர்; சம்பளம் வந்தவுடம் புத்தகம் வாங்குவோர்; மாதச்சீட்டு போட்டு புத்தகம் வாங்குவோர் என, வகை வகையாக வாசகர்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றனர்.இவையெல்லாம் இன்றளவும் வாசிப்பு பழக்கமும், வாசகர்களும் அழியாமல் இருக்கின்றனர் என்பதை அடிகோடிட்டு காட்டுகின்றன. இருப்பினும், இளம் தலைமுறையினர் பலரும் வாசிப்பு பழக்கத்தின் வாடையே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊட்ட வேண்டியது, நம் அனைவரின் கடமை. இளம் தலைமுறையினர் தங்கள் பாடப்புத்தகங்களை படித்து சோர்வடைந்தால் தான், அவர்களுக்கு வாசிப்பின் மீது பெரிய அளவில் ஈடுபாடு இருப்பதில்லை.ஒரே ஒரு முறை, குறைந்த பக்கங்களுடன், எளிய எழுத்து நடையில் உள்ள நல்ல எழுத்தாளரின் புத்தகத்தை அவர்களிடம் கொடுத்து வாசிக்க வையுங்கள். பின், அவர்களே வாசிப்பு உலகிற்கு தங்களை அறியாமல் காலடி எடுத்து வைப்பர். இதை செய்ய வேண்டியது பெற்றோர், மூத்த வாசகர்களின் பொறுப்பே.உலக புத்தக தினம் 1955ல் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பது, மறைந்த எழுத்தாளர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது, புத்தக காப்புரிமை போன்றவற்றை வலியுறுத்துகிறது. இத்தினத்தன்று பலரும் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு புத்தகங்களை பரிசாக கொடுப்பது வழக்கம். வாசிப்பு பயணத்தை தினமலருடன் இன்றே தொடங்குங்கள்.