ஓராண்டு முதுகலை படிப்புகள் அம்பேத்கர் பல்கலையில் அறிமுகம்
புதுடில்லி: டில்லி அம்பேத்கர் பல்கலையில், 2026 - 2027ம் கல்வி ஆண்டில், ஐந்து புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. மேலும், ஓராண்டு 7 முதுகலை பாடங்களும் அறிமுகம் ஆகின்றன.இது குறித்து, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலை அதிகாரிகள் கூறியதாவது:வரும், 2026 - 2027 கல்வியாண்டுக்கான புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. முதுகலையில், கிரியேட்டிவ் ரைட்டிங் என்ற படைப்பாற்றல் நாடகக்கலை ஆகிய படிப்புகள் துவக்கப்படும். அதே போல, அருங்காட்சியல், கலாசாரம் மற்றும் பாரம்பரிய மேலாண்மை ஆகிய இளங்கலை படிப்புகளும் துவக்கப்படுகின்றன.அதே போல, விஷுவல் ஆர்ட்ஸ் என்ற காட்சிக் கலைகள் பிரிவில் இளங்கலை படிப்பும், கணிதத்தில் இளங்கலை அறிவியல் படிப்பும் வரும் கல்வி ஆண்டில் துவக்கப்படும்.இதில், பி.எஸ்.சி., கணிதத்தில் ஏற்கனவே இருந்த பி.ஏ., ஹானர்ஸ் கணிதப் படிப்பிலிருந்து சீரமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் டேட்டா சயன்ஸ் என்ற தரவு அறிவியல் மற்றும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துணைப் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.'தேசியக் கல்விக் கொள்கை 2020'ன்படி, உளவியல், ஆங்கிலம், ஹிந்தி, பொருளாதாரம், சமூகவியல், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய துறைகளில் ஓராண்டு முதுகலை படிப்புகளும் அறிமுகம் செய்யப்படுகின்றன.நாட்டின் எந்த பல்கலையிலும் நான்கு ஆண்டு இளங்கலை படிப்பு முடித்தவர்கள், கியூட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த ஓராண்டு முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை இந்த வாரத்திலேயே துவங்கும். தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதே நேரத்தில், இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கியூட் தேர்வு முடிவு வெளியான பின் துவக்கப்படும்.இரண்டு ஆண்டு முதுகலை படிப்புகள் மற்றும் ஓராண்டு முதுகலை படிப்புகள் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கையை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.