உள்ளூர் செய்திகள்

தோட்டக்கலை சார்ந்த படிப்பை தேர்வு செய்ய ஆலோசனை

பாகலூர்: "தோட்டக்கலை சார்ந்த படிப்புகளை மாணவ மாணவிகள் தேர்வு செய்யலாம்," என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆலோசனை தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் அருகே ஜீமங்கலத்தில் உள்ள ஏசியன் கிறிஸ்டியன் பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், உயர்கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு மற்றும் நேரடி சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கி, அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், வேப்பனஹள்ளி, ஓசூர், சூளகிரி ஒன்றியங்களை சேர்ந்த, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, உயர் கல்வியில் சேர்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதில், 6 ஒன்றியங்களை சேர்ந்த மொத்தம், 392 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அதில், 58 பேருக்கு உடனடியாக உயர்கல்வி சேர்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியில் தோட்டக்கலைத்துறை சார்பில், 3 ஆண்டு டிப்ளமோ படிப்பான, வாழை, மூங்கில் போன்ற திசு வளர்ப்பு படிப்புகள் உள்ளன. திசு வளர்ப்பு படிப்பின் மூலம், பெரிய நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், தோட்டக்கலை சார்ந்த காய்கறிகள், மலர் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. அதனால், தோட்டக்கலை சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். மேலும், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் போன்ற தொழில் கல்வி படிப்பதன் மூலம், எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்புகளை பெற முடியும். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர் கல்வி படிப்பதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்