பினாகா நீண்ட துார ஏவுகணை சோதனை வெற்றி
சந்திப்பூர்: டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கிய, மேம்படுத்தப்பட்ட பினாகா நீண்ட துார ஏவுகணையின் சோதனை ஒடிஷாவின் சந்திபூரில் வெற்றிகரமாக நடந்தது.பல்வேறு துாரங்களில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட பினாகா ஏவுகணைகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. நம் ராணுவத்தின் பீரங்கி திறனை மேம்படுத்தும் வகையில், பினாகா ராக்கெட் அமைப்பை டி.ஆர்.டி.ஓ., தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.இந்நிலையில், பினாகாவின் நீண்ட துார வகை ஏவுகணையின் சோதனை ஒடிஷாவின் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நடந்தது. சோதனையின் போது திட்டமிட்டபடி அனைத்து இயக்கங்களையும் பினாகா ஏவுகணை வெற்றிகரமாக மேற்கொண்டது.முன்கூட்டியே கணிக்கப்பட்ட பாதையை துல்லியமாக பின்பற்றி 60 கி.மீ., தொலைவில் இருந்த இலக்கை தாக்கியதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது. ராணுவத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள பினாகா ராக்கெட் லாஞ்சரில் இருந்தே இந்த ஏவுகணை ஏவப்பட்டது.இதன் வாயிலாக, வெவ்வேறு துாரம் பாயும் திறன் கொண்ட பினாகா ஏவுகணைகளை ஒரே ஏவுதளத்தில் இருந்து இயக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.