உள்ளூர் செய்திகள்

புதிய ஆசிரியர் நியமனத்தால் புத்துயிர் பெற்ற துவக்கப்பள்ளி

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சிங்காரக்கோட்டை எஸ்.குரும்பபட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளி இரு ஆண்டுகளாக மாணவர்கள் இல்லாத நிலையில், நடப்பு கல்வியாண்டில் புதிய ஆசிரியர் நியமிக்கப்பட்ட பின், ஒரு மாணவி, ஒரு மாணவர் கல்வி பயில, மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது.இப்பள்ளியில் போதிய மாணவர்கள் இல்லாமல் கடந்த 2012ல் மூடப்பட்டது. அதே நேரம் இப்பகுதி குழந்தைகள் சிங்காரக்கோட்டை, வேலாயுதம்பாளையம், மொட்டணம்பட்டி, வடமதுரை என பல ஊர்களுக்கும் சென்று படிக்கின்றனர். கிராமத்தினர் எடுத்த முயற்சியால் 2021ல் இங்கு மீண்டும் துவக்கப் பள்ளி 10 மாணவர்களுடன் செயல்பட துவங்கியுள்ளது. இதற்காக ரூ.5 லட்சம் செலவில் கட்டடம் மராமத்து பணியும் நடந்தது.இந்நிலையில் 2024ல் மாணவர்கள் அனைவரும் இங்கு படிக்காமல் மீண்டும் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். 2025லும் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. தினமலர் நாளிதழ் இப்பள்ளியின் நிலை குறித்து ஆண்டுதோறும் செய்தி வெளியிட்டு வந்தது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் ஆசிரியை உதயராணி பணிக்கு நியமிக்கப்பட்டார்.இங்கு வந்ததும் மாணவர்களே இல்லாத பள்ளி என்பதை அறிந்து அவர், அதிர்ச்சியானார். பின்னர் மேற்பார்வையாளர் ஜான்போஸ்கோ, முன்னாள் ஆசிரியர் தேன்மொழி உதவியுடன் கிராம மக்களிடம் பே சியதில், பள்ளிக்கு இரு மாணவர்கள் சேர்க்கப்பட்டு தற்போது மீண்டும் இயங்குகிறது. இவ்விரு மாணவர்களுக்கான காலை, மதிய உணவு சிங்காரக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் மேலும் மாணவர்கள் சேர்க்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்