வெளிநாடுகளில் படிக்க இந்திய மாணவர்களிடம் ஆர்வம் அதிகம்
டி.சி.எஸ்., நிறுவனம் சார்பில் சமீபத்தில், நாட்டின் 11 முக்கிய நகரங்களில் ஆங்கில வழி கல்வி படிக்கும் மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 12ல் இருந்து 18 வயதுக்குட்பட்ட, 10 ஆயிரம் மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தற்போதைய இளம் மாணவர்களில் 69 சதவீதம் பேர், தங்கள் உயர் கல்வியை வெளிநாடுகளில் படிக்க வேண்டுமென விரும்புகின்றனர். 54 சதவீதம் மாணவர்கள், தங்கள் மொபைல் போன்களில் இன்டர்நெட் இணைப்பு பெற்றுள்ளனர். 61 சதவீதம் பேர், குறைந்தது ஒரு மணி நேரமாவது இன்டர்நெட் பார்ப்பதற்காக செலவிடுகின்றனர். 44 சதவீதம் பேர், தங்களுக்கு சம்பளம் தான் முக்கியம் என கருதுகின்றனர். 81 சதவீதம் பேர், தங்களின் எதிர்காலத்துக்கு தகவல் தொழில்நுட்ப துறை தான் சிறந்தது என கருதுகின்றனர். 39 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ படிப்பை தேர்வு செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். மாணவர்களில் 83 சதவீதம் பேர், மாதத்துக்கு 1,000 ரூபாயாவது பெற்றோரிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.