உள்ளூர் செய்திகள்

‘துரோகம் செய்யாத மிகச் சிறந்த தோழன் புத்தகம்’

சென்னை: “புத்தக படிப்பு, தாய்மொழி ஆகிய இரண்டிலிருந்தும், இளைஞர்கள் விலகிச் செல்கின்றனர்,” என மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் பேசினார். சென்னையில், இந்திய மக்கள் தொடர்பு கழகம் சார்பில், ‘இன்றைய புத்தக உலகம்’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரவி தமிழ்வாணன் பேசியதாவது: இந்திய மக்கள் தொடர்பு கழகம் நடத்தும், அனைத்து கூட்டமும் ஆங்கிலத்தில் தான் நடக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த கூட்டத்தில், அனைவரும் தமிழில் பேச வேண்டும் என கழகச் செயலர் கிருஷ்ணன் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. நட்புணர்வு, அங்கீகாரம், மரியாதை மற்றும் பாராட்டு, ஆகிய நான்கையும் உள்ளடக்கியது தான் பொதுமக்கள் தொடர்பு. குறையை நிவர்த்தி செய்யும், அரிய பணியை மக்கள் தொடர்பாளர்கள் செய்து வருகின்றனர். அந்த பணி, பாராட்டத்தக்கது. தற்போது, பாராட்டும் பழக்கம் நம்மிடம் குறைந்து வருகிறது. சமீபத்தில், நான் கேட்ட ஒரு செய்தியை சொல்கிறேன். ‘மக்கள் தொகை எண்ணிக்கை பெருகிவிட்டது; மனிதர்கள் குறைந்து விட்டனர். இதற்கு, முக்கிய காரணம், இயந்திர வாழ்க்கையை பின்பற்றுவது தான். ஆரம்பத்தில், அச்சு துறையில், எழுத்துக்களை கையில் கோர்க்கும் முறை இருந்தது. கணினி வளர்ச்சியால், ஆயிரம் பக்கங்களை நான்கு நாட்களில் உருவாக்கும் அளவிற்கு, அச்சு துறை முன்னேற்றம் கண்டுள்ளது. புத்தகங்கள் தான், கற்பனை சக்தியை வளர்க்கும் மிகப் பெரிய கருவி. கணினி வளர்ச்சியில், அனைத்து தகவலும் விரல் நுனியில் கிடைத்தாலும், புத்தகத்தை படித்து பெரும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. புத்தகம் படிப்பதில் அதிக நேரம் செலவிடுவது போய், ‘டிவி’ நிகழ்ச்சியில் அதிகம் நேரம் செலவிடுவது அதிகரித்து உள்ளது. புத்தகங்களை தொடர்ந்து படிக்கும் பழக்கம் மூலம், ‘டிவி’ யில் அதிகம் நேரம் செலவிடுவது குறையும். ஒரு சில புத்தகங்கள், வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தும். புத்தகங்களை தேடி படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. துரோகம் செய்யாத, கைமாத்து கேட்காத, மிகச் சிறந்த தோழன் புத்தகங்கள் தான். குறைந்தது ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். புத்தக படிப்பில் உள்ள ஆர்வம் காரணமாக, பல வெளிநாடுளில் உள்ள நூலகங்களுக்கு சென்றிருக்கிறேன். பதிப்பாளன் என்பதால், அரசை பாராட்டுவதாக எண்ண வேண்டாம். தமிழகத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல், வேறு எந்த நாட்டிலும் நூலகம் கிடையாது. புத்தகங்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக, அண்ணா நூலகம் அமைந்துள்ளது. ஒரு முறையாவது, அந்த நூலகத்தை அனைவரும் பார்வையிட வேண்டும். இன்று, தாய்மொழி, புத்தகம் இந்த இரண்டிலும் இருந்து, இளைஞர்கள் விலகியுள்ளனர். ஆழ்நிலை தியானத்தை கொடுக்கும் ஆற்றல், புத்தகங்களுக்கு மட்டுமே உள்ளது. பெற்றோர்கள், அடுத்த தலைமுறைக்கு, புத்தகங்களை சொத்தாக கொடுக்க வேண்டும். இவ்வாறு ரவி தமிழ்வாணன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்