சி.பி.எஸ்.இ., மறுமதிப்பீடு முடிவுகள் தாமதம்; கலக்கத்தில் 1.60 லட்சம் மாணவர்கள்
புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், கல்லுாரிகளில் இடம் கிடைக்குமா? என்ற அச்சத்தில் மாணவர்கள் மூழ்கியுள்ளனர்.சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாகின. இதில், தங்களுக்கு கிடைத்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்து இருந்தனர்.வழக்கமாக, மாநில பாடத்திட்ட முடிவுகள் வெளியாகி, கல்லுாரிகளில் முதற்கட்ட மாணவர் சேர்க்கை துவங்கம் முன்னரே, சி.பி.எஸ்.இ., மறுமதிப்பீடு முடிவுகள் வெளியாகிவிடும். ஆனால், இம்முறை ஜூன் மாதத்தில் இரு வாரங்கள் கடக்க உள்ள நிலையிலும், மறுமதிப்பீடு முடிவுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இது வரை வெளியாகவில்லை.மாணவர்களின் எதிர்காலம் கருதி, இந்த விவகாரத்தை கடந்த 9ம் தேதி கையில் எடுத்த உச்சநீதிமன்றம், 'நள்ளிரவிலும் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து, விரைவில் வெளியிடுங்கள்' என, உத்தரவு பிறப்பித்தது. மேலும், முடிவுகளை வெளியிடும் திட்டம் குறித்து ஜூன் 12க்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.அந்த காலக்கெடுவும் தற்போது கடந்த நிலையில், மறுமதிப்பீடு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற உறுதியான தகவல் வெளியிடப்படாததால், உயர்கல்வி சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களும், பெற்றோரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.கல்லுாரிகள், பல்கலைகளில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், சி.பி.எஸ்.இ., நிர்வாகம் மறுமதிப்பீடு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.