கேரளாவில் வனப்பகுதியில் சிக்கிய மாணவர்கள் உள்ளிட்ட 35 பேர் மீட்பு
கொல்லம்: கேரளாவில் உரிய அனுமதியின்றி காட்டுக்குள் சென்று சிக்கிக் கொண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, 35 பேர் அடங்கிய குழுவினர் வனத் துறையினரின் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கும்பவருட்டி நீர்வீழ்ச்சி பகுதிக்கு, அதே பகுதி யைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றனர்.பள்ளியில் உள்ள சாரணர் - சாரணியர் இயக்கம் சார்பில் சென்ற, 32 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அங்குள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்தில் தங்கியிருந்து, சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், குழுவில் இருந்த 15 மாணவர்கள், 17 மாணவியர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உரிய அனுமதி பெறாமல், அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு செய்தனர்.நேற்று முன்தினம் காலை, 11:00 மணிஅளவில் நான்கரை கி.மீ., துாரம் வனப்பகுதிக்குள் சென்றவர்கள், பனி மற்றும் மழை காரணமாக பாதையை மறந்து காணாமல் போயினர். ஆய்வுக்கு வந்தவர்கள் மாயமானதை அடுத்து, அவர்களை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தீவிர தேடுதலுக்குப் பின், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.காட்டு யானைகள் அதிகம் உலாவுவதை அறிந்த மாணவர் மற்றும் ஆசிரியர் குழு, காட்டில் இருந்த பாறை ஒன்றின் அருகே பல மணி நேரம் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.