கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்
வங்கியில் கடன் தொகையை கணக்கிடும் ஒரு பட்டியலில், வேலை வாய்ப்புள்ள படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் 4,750 ரூபாய் என உள்ளது. கல்விக் கட்டணக் குழு கூட 28 ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்துள்ளபோது, 4,750 ரூபாய்க்கு வேலை வாய்ப்பு தரும் கல்வியை யாராலும் தர இயலாது. இத்தொகை, தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் 1994 - 95ம் ஆண்டில் நிர்ணயித்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய ஆசிரியர் சம்பளம், இதர செலவினங்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில், கல்விக் கட்டணத்தையும் 47 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். பி.எஸ்சி., வேலை வாய்ப்பு தரும் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முடித்த உடன் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்படாது. எனவே, கட்டணத்திற்கு முறையான ரசீது அளிக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்லூரி சான்றுகளின் அடிப்படையில் கடன் வசதியை வங்கிகள் அளிக்க, அரசு உத்தரவிட வேண்டும். உண்மை நிலையை கருத்தில் கொள்ளாமல், கல்விக் கட்டணமாக 4,750 ரூபாய் தான் தர முடியும் என, வங்கிகளின் தலைமையகங்களில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மாணவர்கள், சுயநிதி கல்லூரிகளில் வேலை வாய்ப்பு தரும் படிப்புகளில் சேர முடியாத நிலை ஏற்படும். வங்கிக் கடன் என்பது வெற்றுப் பேச்சாகி விடும். உடனே, மத்திய நிதி அமைச்சர் தலையிட்டு, ஏழை, மாணவர்களுக்கு உதவ வேண்டும் என கல்வியாளர்கள் விரும்புகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் இந்நாளில், உடனடி வேலை வாய்ப்பை தருகிற பி.எஸ்சி., மாரிடைம் ஹாஸ்பிடாலிட்டி ஸ்டடீஸ், பி.எஸ்சி., அனிமேஷன், பி.எஸ்சி., நெட் ஒர்க்கிங், பி.எஸ்சி., நர்சிங் போன்றவற்றில் சேரும் மாணவர்களுக்கு தேவையான உபகரணம், கம்ப்யூட்டர், சாப்ட்வேர் போன்றவை வாங்க, கல்லூரிகளுக்கு அதிக நிதி தேவை. இதற்கேற்ப கல்விக் கட்டணம் பெறவில்லையெனில், தரமற்ற கல்லூரிகளே தோன்றக் கூடும். இதனால், வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும். வளமான தமிழகம், இந்தியா உருவாக, திறமையான இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான கல்வியைப் பெற வங்கிகள், யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளுடன் இணைவிக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும்.