பார்வையற்ற மாணவர்கள் தங்களின் உயர்கல்விக்கு உதவிபெற...
பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன், முன்னாள் வங்கியாளர், டி.கே.படேல் என்பவரால், பார்வையற்றோருக்கு உதவும் அறக்கட்டளை துவக்கப்பட்டது. ஹாங்காங்கை சேர்ந்த இவர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உதவியுடன், இந்த அறக்கட்டளையை துவக்கினார். ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை சார்பில், 150 பார்வையற்ற மாணவர்களுக்கு, கல்லூரிகள், பல்கலைகளில், சேர்ந்து படிக்க உதவி செய்யப்படுகிறது. இதன்மூலம் 143 மாணவர்கள், பி.ஏ., எம்.ஏ., மற்றும் பி.எட்., பட்டங்களை பெற்றுள்ளனர். சிறந்த தகுதியுடைய மாணவர்களுக்கு, அவர்கள் எந்த மதம், எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பாகுபாடின்றி உதவி செய்யப்படுகிறது. இந்தியாவில், இந்த அறக்கட்டளையை முன்னாள் வங்கியாளர், ரமணி நடத்தி வருகிறார். இவர் பார்வையற்ற மாணவர்கள் பலருக்கு, இங்குள்ள பல்கலை, கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளார். மாணவர்களுக்கு படிப்பதற்கான நிதி உதவி செய்வதுடன், இந்த அறக்கட்டளை சார்பில், சென்னை மற்றும் மதுரையில் இரண்டு பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டு, அதில் 300 பார்வையற்ற மாணவர்கள் படிக்கவும், 180 மாணவர்களுக்கு விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கல்வி உதவி தேவைப்படும் மாணவர்கள் அணுகினால், அறக்கட்டளையில் இருந்து சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடம் கலந்தாய்வு நடத்தி, அதன்பின் உதவிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, ரமணி 96001 78238 மற்றும் சீதாராமன் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.