கழிப்பறை இல்லாததால் பள்ளி மாணவியர் அவதி
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு அரசு பள்ளியில் மாணவிகள் பயன்படுத்த கழிப்பிடம் கட்டப்படாததால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவிகளுக்கான கழிப்பிடம் சேதமடைந்ததை அடுத்து புதிதாக கழிப்பிடம் கட்ட பழைய கழிப்பிடம் இடித்து அகற்றப்பட்டது. ஆனால், இதுநாள் வரையில் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டவில்லை. இதனால், பள்ளி மாணவிகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று இயற்கை உபதைகளை கழித்து வருகின்றனர். இதன் விளைவாக பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன. மேலும், எம்.பி., மேம்பாட்டு நிதியில் மாணவர்களுக்கான கழிப்பிடம் 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், இதுவரையில் திறக்காததால் புதிய கழிப்பிடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.எனவே, மாணவிகளுக்கு புதிதாக கழிப்பிடம் அமைக்கவும், மாணவர்களுக்கான கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.