முத்தனஹல்லியில் குவியும் புதிய கல்வி நிறுவனங்கள்
கர்நாடகாவின் முத்தனஹல்லியில் ஐ.ஐ.டி., உட்பட பல்வேறு தொழில்நுட்ப கல்விநிறுவனங்கள் தொடங்கபடவுள்ளது. இதனால் முத்தனஹல்லி இந்தியாவின் முக்கிய கல்வி மையங்களில் ஒன்றாக மாறலாம். இந்தியாவில் மொத்தம் ஏழு ஐ.ஐ.டி.,க்கள் செயல்பட்டு வந்தன. இது தவிர புதிதாக எட்டு ஐ.ஐ.டி.,கள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டே ஆறு ஐ.ஐ.டி.,கள் செயல்பட தொடங்கிவிட்டன. எனினும் கர்நாடகா மாநிலத்தில் எந்த ஐ.ஐ.டி.,யும் இல்லை. இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கர்நாடகாவின் சிக்பல்லபூர் அருகே முத்தனஹல்லியில் புதிய ஐ.ஐ.டி., தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். சிக்பல்லபூரில் போட்டியிட்ட வீரப்ப மொய்லி தொகுதியில் புதிய ஐ.ஐ.டி., தொடங்குவதாக வாக்களித்திருந்தார். தற்போது புதிய ஐ.ஐ.டி., குறித்து மத்திய மனித வள அமைச்சர் கபில் சிபலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மொய்லி தெரிவித்துள்ளார். பெல்காமில் அமைந்துள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் புதிதாக ‘விஸ்வேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு டெக்னாலஜி’யை முத்தனஹல்லியில் தொடங்கவுள்ளது. தொழில்நுட்ப பிரிவில் இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கும் வகையில் இந்த கல்விநிறுவனம் அமையவுள்ளது. இதற்காக 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. புட்டபர்த்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகமும், முத்தனஹல்லியில் தனது புதிய வளாகத்தை தொடங்கவுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.