உள்ளூர் செய்திகள்

‘உயர்கல்வி படிப்போர் தமிழகத்தில் தான் அதிகம்’

விழாவில், இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசினார். அவர் மேலும் பேசியதாவது: விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் 86 வகுப்புகள் கொண்ட புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கப்படும். விழுப்புரம் மகளிர் பள்ளியில் கல்வியின் தரமும், தேர்ச்சி விகிதமும் மாநில அளவில் அதிகரித்துள்ளது. ஆனால் இங்குள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய அளவிற்கு தேர்ச்சி விகிதம் இல்லை. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இந்தாண்டு 6 முதல் 12ம் வகுப்பு வரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 125 மாணவர்களும், ஒரு லட்சத்து எட்டாயிரத்து 800 மாணவிகளும் படித்து வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் அதிகளவில் படித்து வருகின்றனர். இந்தியாவில் 15 முதல் 25 வயது வரை உள்ளவர்களில் உயர்கல்விப் படிப்போரின் எண்ணிக்கை தமிழத்தில் மட்டும் தான் 16 சதவீதம். மற்ற மாநிலங்களில் இதன் சராசரி 11 சதவீதம் மட்டுமே. அதேபோல் இந்தியாவிலேயே இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம். இங்கு  ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்கின்றனர். நாட்டில் கல்வி வளர்ச்சி இருந்தால் மற்ற எல்லா துறைகளும் வேகமாக வளர்ச்சியடையும். கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே என்ற நிலை மாறி தற்போது அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் சிறப்பிக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பிற்கும் சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டம் அமல்படுத்தப்படும். அதன் பின்னர் 5 ஆண்டுகளில் படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்குமே சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும். அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பகுதி நேரமாக தொழிற்கல்வி பழகவும் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக்கல் கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது திருச்சி கல்லூரி மாணவர்கள் 3,000 பேர் அங்குள்ள தொழிற் கல்லூரிகளில் பகுதி நேர பயிற்சி பெற்று வருகின்றனர். நுழைவு தேர்வை ரத்து செய்ததின் மூலம் ஏராளமான கிராம மக்கள் உயர் கல்வி படிக்க வாய்ப்பு கிடைத்தது. மாணவர்களை காட்டிலும் ஆசிரியர்கள் அதிகம் படிப்பதிலும், நூலகங்களை பயன்படுத்திக் கொள்வதிலும் ஆர்வம் செலுத்தினால், அறிவில் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என்று பேசினார். கல்வி கற்பதில் யாருக்கும் போதும் என்ற மனம் இருக்கக் கூடாது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்