திருவள்ளுவர் பல்கலை.,யில் ஊழல்: அதிகாரி விசாரணை
வேலுார்: வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்காட்டிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2015ல் நடந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இதில், பல்கலைக்கழகத்தில், 112 கோடி ரூபாய் அளவிற்கு நிதி நிர்வாக முறைகேடு நடந்ததாகவும், பல்கலைக்கழகத்திற்கு கொள்முதல் செய்த, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படுத்த தன்மை சட்டத்தை மீறி, பல்கலைக்கழகத்திற்கு பண இழப்பு ஏற்படுத்தியது மற்றும் பல்கலைக்கழக தேர்வு முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் நேற்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார். மேலும், மனுதாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடம் விசாரணை நடத்தப்பட்டது.