சைபர் கிரைம் குற்றங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி: தேனி ஒன்றியம் வெங்கடாசலபுரம் வரத வேங்கடரமண மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.எஸ்.ஐ., அழகுபாண்டி தலைமை வகித்தார். ஏட்டு ராஜபிரபு பங்கேற்றார். தலைமை ஆசிரியர் தினகரன் வரவேற்றார். எஸ்.ஐ., பேசியதாவது:மாணவ, மாணவிகள் வாட்ஸ் ஆப், முகநுால், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பயன்பாடுகளில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர். இணைய குற்றவாளிகள் இப்படங்களை மார்பிங் செய்து தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.இதனால் தங்களது சுயவிபரங்கள் ஆதார் எண் உட்பட எந்த தகவல்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது என்றார். ஆன்லைன் மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை விளக்கினார். உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சரவணன் செய்திருந்தார்.