ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பொறுப்பில் பாரதியார் பல்கலை?
கோவை: பாரதியார் பல்கலையில் சரியான தலைமையின்மை காரணமாக, பல்வேறு குளறுபடிகள் தொடர்கின்றன. இதனால், நிரந்த துணைவேந்தர் நியமிக்கும் வரை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிலையுள்ள ஒருவரிடமும் முழு பொறுப்பை வழங்க பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.பல்கலையில், துணைவேந்தர் பணியிடம் 2022 அக்., மாதம் முதல் காலியாகவுள்ளது. மாநில அரசுக்கும், கவர்னருக்கும் நிலவும் பனிப்போர் காரணமாக இப்பதவி தற்போது நியமனம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியே. தவிர, பதிவாளர் பணியிடம் 2016 ஏப்., முதல், தேர்வாணையர் பணியிடம் 2018 ஏப்., மாதம் முதல், கூடுதல் தேர்வாணையர் பதவி 2009 செப்., முதலும், இயக்குனர் பதவி 2015 செப்., பி.ஆர்.ஓ., பதவி 2015 ஜூன் முதலும் காலியாக தொடர்கிறது. அனைத்து முக்கிய பதவிகளுமே, தற்போது பேராசிரியர்களிடம் கூடுதல் பொறுப்பில் வழங்கப்பட்டுள்ளன.தவிர, ஏ.எஸ்.ஓ., 68 இடங்கள், உதவியாளர் 68, அலுவலக உதவியாளர் 31 உட்பட, 478 அலுவலர் அல்லாத பணியிடங்களில், 360 இடங்கள் தற்போது காலியாகவுள்ளன. சரியான தலைமை இல்லாத சூழலில், நான்கு பேர் கொண்ட துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள், நிர்வாக பணிகளை கவனித்து வருகின்றனர்.இந்நிலையில், பாரதியார் பல்கலையில் கம்ப்யூட்டர் கொள்முதல் முறைகேடு, பேராசிரியர் மீது பாலியல் புகார், 150 டன் விடைத்தாள் விற்பனை முறைகேடு, சிண்டிகேட் உறுப்பினர் மீது பல்வேறு புகார், பேராசிரியர்கள் மத்தியில் மோதல், ரூசா நிதி பயன்பாடு முறைகேடு, பி.எச்டி., மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் மோதல் என, பல சிக்கல்கள் நீடித்து வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும், இரண்டு புகார்கள் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும், பாரதியார் பல்கலையின் தொலைதுார கல்வி மையத்தின் கீழ், 50 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது சேர்க்கை ஒன்றும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெறும், ஆன்லைன் வழிகல்வி மட்டுமே தொலைதுார கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ளன. தவிர, ஒவ்வொரு கோப்புகளும் பல மாதங்கள் தேங்கி விடுவதாக, பேராசிரியர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சரியான தலைமை இருந்தால் மட்டுமே, நிர்வாகத்தில் நிலவும், குளறுபடிகள் களையப்படும் என பேராசிரியர்கள், அலுவலர்கள் புலம்பி வருகின்றனர்.மத்திய அரசின் ரூசா திட்டத்தின் கீழ், பல்கலைக்கு 50 கோடி நிதி கிடைத்தும் இதுவரை, 15 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. செலவுகள் செய்ததிலும், முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, பல்கலை பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் தொடர்கின்றன. மாநில அரசும், கவர்னர் தரப்பும் சுமூக முடிவை மேற்கொண்டு, உடனடியாக துணைவேந்தர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைவேந்தர் நியமனம் வரை, பொறுப்பு குழுவை கலைத்து விட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் முழுமையான நேரடி கட்டுப்பாட்டில் பல்கலையை கொண்டு வரவேண்டும் என்றனர்.