உள்ளூர் செய்திகள்

சுடிதார் அணிய அனுமதி: ஆசிரியைகள் வரவேற்பு

திருப்பூர்: அரசு பள்ளி ஆசிரியர்கள், சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாம், என்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷின் அறிவிப்பை ஆசிரியைகள் வரவேற்றுள்ளனர்.நாமக்கல்லில் நடந்த கனவு ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மகேஷ் பேசுகையில், அரசு பள்ளி ஆசிரியைகள் இனி சுடிதார் அணிந்து வரலாம் என பேசினார். விரைவில் அல்லது வரும் கல்வியாண்டில் இதுதொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆசிரியைகளிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பூலுவப்பட்டி: ஆசிரியை நிறைய பேர் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து இருந்தனர். முழுமையான உடலை மறைக்கும் ஆடைகளில் சுடிதாரும் ஒன்று என்பதால், சேலையை விடவும் சுடிதார் பாதுகாப்பானது தான். சுடிதார் அணிந்து வந்தால் கட்டாயம் துப்பாட்டா அணிய வேண்டும். அல்லது மெட்ரிக் பள்ளிகளை போல் ஓவர்கோட் அணிய வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கதக்கது தான்.ராதாமணி, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 15 வேலம்பாளையம்: கல்வித்துறையில் ஆடை சுதந்திரம் அளிப்பது புதியதல்ல. பாவாடை, தாவணிக்கு மாற்றாக ஸ்கர்ட் வந்தது. அதை விட மாணவியருக்கு பாதுகாப்பானது சுடிதார் என்பதால், மாணவியர் சுடிதார் அணிந்துவர அனுமதிக்கப்பட்டது.அவ்வகையில், ஆசிரியைகள் சேலையும் அணியலாம்; சுடிதாரும் அணியலாம் என்ற அறிவிப்பு ஒரு மாற்றம் தான். சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள்; அதைச் சரிவர, முறையாக, பயன்படுத்துவது ஆசிரியைகளின் பொறுப்பு.அகிலா, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாரப்பாளையம், மண்ணரை: சேலை அணிந்து வருவதை விடவும், சுடிதார் அணிந்து வருவது ஆசிரியைகளுக்கு பாதுப்பானதாக இருக்கும். பயணிக்கும் போது, டூவீலர்களை இயக்கி வரும் போது, பள்ளியில் பிற கல்விப்பணிகளை மேற்கொள்ளும் போது சுடிதார் பாதுகாப்பான ஆடையாக இருக்கும். சுடிதார் அணியும் போது கட்டாயம் துப்பட்டா அல்லது ஓவர்கோட் அணிய வேண்டும். அப்போது தான், சுடிதார் அறிவிப்புக்கான பலன் இருக்கும். ஆசிரியைகள் பலரும் இதை ஏற்றுக்கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்