பேச்சுப் போட்டியில் அசத்திய மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு
கோவை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கம் வழங்கப்பட்டது.ஆண்டுதோறும் நவ., மாதம், தமிழகம் முழுவதும், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவையில் நடப்பாண்டு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது.தமிழ் வளர்ச்சி துறை கோவை மாவட்ட துணை இயக்குனர் அன்பரசி துவக்கி வைத்தார். காந்தியடிகள் குறித்த பேச்சு போட்டியில், 25 பள்ளிகளில் இருந்து 25 மாணவர்கள், 18 கல்லுாரிகளில் இருந்து 18 மாணவர்கள் பங்கேற்றனர். முன்னாள் பிரதமர் நேரு தலைப்பிலான பேச்சுப் போட்டியில், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் கொண்ட குழுவினர், வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். முதல் பரிசாக 5,000ம், இரண்டாம் பரிசாக 3,000ம், மூன்றாம் பரிசாக 2,000ம் வழங்கப்பட்டது. சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா 2,000ம் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.