ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஆணை வழங்கல்
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியத்தில், 28 ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஆணையை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகவேல் வழங்கினார்.அரவக்குறிச்சி ஒன்றியத்தில், 2004 முதல் 2006ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு, 1.6.2006ல், காலமுறை ஊதியம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 20 ஆண்டுகள் ஒரே பதவியில் பணிபுரிந்தமைக்காக சிறப்பு நிலை ஆணை வழங்கும் நிகழ்வு அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகவேல் தலைமை வகித்தார்.அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, வரதராசன், அலுவலக கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் பணிபுரியும், 28 ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஆணை வழங்கப்பட்டது. மேலும், சிறப்பு நிலை ஆணைகளை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் கூறுகையில்,'கடந்த 6ம் தேதி ஆசிரியர்கள் குறைதீர் முகாமில், சிறப்பு நிலை விண்ணப்பங்களை அளித்தோம்.அதை ஏற்று மிகவும் விரைவாக ஆணைகளை வழங்கிய வட்டார கல்வி அலுவலர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் நன்றி,' என்றனர்.வட்டார கல்வி அலுவலக பணியாளர்கள் மகாலிங்கம், பிரான்சிஸ் ஜான்சி ராணி, நாகதேவி, லோகேஸ்வரன், பாபுராஜ் ஆகியோரை ஆசிரியர்கள் பாராட்டினர்.