உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் நிறைவு: 7,537 இடங்கள் காலி

பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் பிளஸ் 2 உடனடி தேர்வெழுதி பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றவர்களுக்கான, பொறியியல் துணை கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஆகஸ்ட் 27ம் தேதி நடந்தது. இதற்காக விண்ணப்பித்தவர்களில், 821 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் துணை கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். கவுன்சிலிங்கின் போது, 558 பேர் கலந்துகொண்டனர்; 263 பேர் கலந்து கொள்ளவில்லை. பங்கேற்றவர்களில் 531 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 27 பேர் ‘இடம் வேண்டாம்’ என தெரிவித்துவிட்டனர். கவுன்சிலிங் முடிவில் மொத்தம் 7,537 இடங்கள் காலியாக உள்ளன. கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில், இ.சி.இ., பிரிவில் எஸ்.சி., எக்ஸ் - சர்வீஸ்மேன் பிரிவில் ஒரு இடம் காலியாக உள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளில், ஓ.சி., 443, பி.சி.எம்., 403, பி.சி.சி., 256, பி.சி., 1,074, எம்.பி.சி., 1,210, எஸ்.சி., 3,616, எஸ்.டி., 534 என 7,536 இடங்கள் காலியாக உள்ளன. வெளிமாநில மாணவர்கள் பிரிவில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு 28ம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது. பிளஸ் 2வில் தொழிற்கல்வி படித்தவர்கள் பிரிவில் காலியாக உள்ள 90 இடங்களுக்கு 29ம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது. தொடர்ந்து 30ம் தேதி நடக்கவுள்ள பொறியியல் சிறப்பு கவுன்சிலிங்கில், பொறியியல் கவுன்சிலிங் மற்றும் துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக கலந்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்