கல்லூரிகளில் ராக்கிங்: கடும் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ராக்கிங் ஈடுபடும் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்," என கலெக்டர் ராஜேஷ் எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ராக்கிங் ஈடுபடுவதை தடைசெய்வது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கலெக்டர் ராஜேஷ் பேசியதாவது: "ராகிங் குறித்து புகார் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில், 1077 மற்றும் காவல் துறையில், 100 ஆகிய கட்டணம் இல்லாத டெலிஃபோன் எண் மூலம் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். ஒவ்வொரு கல்லூரிகளிலும் புகார் பெட்டி மற்றும் ஆலோசனை பெட்டி வைக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கேலி செய்வதை தடுக்கும் பொருட்டு குழு அமைக்க வேண்டும். கல்லூரிகளில் கேலி செய்வதை தடுக்கும் குழு உறுப்பினர்கள் விபரத்தையும், மொபைல்ஃபோன் எண்களையும் கல்லூரி விடுதியில் தெளிவாக எழுதி வைக்க வேண்டும். கல்லூரி விடுதிகளில் முதலாண்டு மாணவர்களுக்கு தனியாக அறைகள் கொடுத்து பராமரிக்க வேண்டும். கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை ரோஃப் வழங்கும் போது, முதலாம் ஆண்டு மாணவர்கள் என தனியாக தெரியும் வகையில் தனி நிறத்தில் கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும். கல்லூரி நிர்வாகம் மாணவர்களை சேர்க்கும் போது உறுதிமொழி படிவத்தில் மாணவர்களின் பெற்றோரிடமிருந்து தனது மகன் மற்றும் மகள் கேலி செய்ய மாட்டார் என்று எழுதி கையொப்பம் பெற வேண்டும். கல்லூரி விடுதிகளுக்கு தனியாக கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கல்லூரிகளில் மாணவர்களை கேலி செய்யும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் அல்லது அவரது பெற்றோர்கள் இது குறித்து போலீஸில் புகார் அளிக்கும் போது, எவ்வித தாமதமின்றி உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட அளவில் வருவாய் துறையினர் கல்வி புதுறையினர் மற்றும் காவல் துறையினர் ஆகியோரைக் கொண்ட கண்காணிப்புக்குழு ஒன்று ஏற்படுத்த வேண்டும்." இவ்வாறு பேசினார்.