இந்தியாவுக்கு சவாலாக அமெரிக்காவில் கல்வி
உலகின் வல்லமை நிறைந்த நாடாக திகழும் அமெரிக்காவில் சமீபத்திய பொருளாதார தேக்க நிலை பலத்த எதிர்விளைவுகளை ஏற்படுத்தி வருவது நாம் அறிந்ததே. அங்கு ஒபாமாவின் ஆட்சி மாற்றத்திற்குப் பின் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஒபாமா அறிவித்த சில விஷயங்கள் இதை உறுதி செய்துள்ளன. மிச்சிகனில் உள்ள ஒரு கல்லூரியில் பேசிய ஒபாமா உலகப் பொருளாதாரத்திற்கேற்ப அமெரிக்கர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டிய தேவைகள் உள்ளதாகக் கூறியுள்ளார். 21ம் நூற்றாண்டில் முறையான கல்வி மற்றும் தயாரிப்புகளின் மூலமாக மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 2020ம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிக அளவு பட்டதாரிகளை அமெரிக்கா கொண்டிருக்க வேண்டும் என்ற இலக்கையும் ஒபாமா நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை எட்ட அனைத்து வகையிலும் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஏற்கனவே கல்வி நிறுவனங்களின் நூலகங்கள், வகுப்பறைகள் போன்றவற்றில் வரலாறு காணாத அளவு முதலீட்டை கல்வியில் அமெரிக்கா செய்து வருகிறது. இப்படி இடைவிடாத கல்வி சீர்திருத்த முயற்சிகளின் மூலமாக 21ம் நூற்றாண்டுக்கான கல்விப் புரட்சியை அமெரிக்காவில் ஏற்படுத்தவும் குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவுடனும் பிற நாடுகளுடனும் போட்டியிட வேண்டும் என்றும் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.