பொறியியல் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் கட்டடக் கலைத்துறை, அகமதாபாத் சி.இ.பி.டி., பல்கலைக்கிடையிலான எம்.பிளான் முதுகலை பட்டப் படிப்பு, இளநிலை உட்புற வடிவமைப்பு பட்டப்படிப்பு துவக்குதல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று நடந்தது.கல்லுாரி பதிவாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். கட்டடக் கலைத் துறை தலைவர் ஜினு கிச்சலே வரவேற்றார். கல்லுாரி தாளாளர் ஹரி தியாகராஜன், சி.இ.பி.டி., பல்கலை தலைவர் பர்ஜுர் மெஹ்தா புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டனர்.சென்னை சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா பேசுகையில், வளர்ந்து வரும் நகரங்களின் ஒழுங்கற்ற தன்மை பலவித இடையூறுகளை உருவாக்குகிறது. இந்த எம்.பிளான் பட்டப்படிப்பு தற்போதைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியம் என்றார்.சி.இ.பி.டி., பல்கலை தலைவர் பர்ஜுர் மெஹ்தா பேசுகையில், இந்த பட்டப் படிப்புகள் வெறும் கோட்பாடுகளுடன் நின்று விடாமல் செயல் முறைகளுடன் கூடிய பாடத்திட்டங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்மயமாதலின் எதிர்கால சவால்களுக்கு இப்பாடத்திட்டங்கள் சரியான தீர்வளிக்கும் என்றார்.