உள்ளூர் செய்திகள்

சிறுபான்மையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை: மத்திய அரசு, பிரதமரின் விகாஸ் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரித்து அவர்களை தொழில்முறைத் தகுதியுடையவர்களாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கம்.வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பள்ளி, கல்லுாரிகளில் இடைநின்றவர்களுக்கு திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், சிறுபான்மையினருக்கு குறிப்பாக மகளிருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.வேளாண் பல்கலை மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் 1,700 சிறுபான்மையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குவதற்கான துவக்க விழா வேளாண் பல்கலையில் நடந்தது. பல்கலை துணைவேந்தர் (பொ) சுப்பிரமணியன் விழாவை துவக்கி வைத்தார். பயிற்சியை நபார்டு ஆலோசனை சேவைகள் கழகம், பெங்களூரு ஆதித்யா உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்குகின்றன.“டிஜிட்டல் வேளாண் விரிவாக்க அபிவிருத்தியாளர் பயிற்சி 820 பேருக்கும், அங்கக சாகுபடியாளர் பயிற்சி 360 பேருக்கும், மலர் சாகுபடியாளர் பயிற்சி 520 பேருக்கும் வழங்கப்பட உள்ளன. பயிற்சி பெறுவோருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும். 33 சதவீதம் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என, துணைவேந்தர் (பொ) சுப்பிரமணியம் கூறினார்.வேளாண் பல்கலை ஆராய்ச்சி இயக்குநர் ரவீந்தரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்