உள்ளூர் செய்திகள்

பொறியியல் கவுன்சிலிங் : 100 விளையாட்டு வீரர்கள் சேர்க்கை பெற்றனர்

சென்னையைச் சேர்ந்த, ஸ்குவாஷ் வீராங்கனை அனகா, பொறியியல் கவுன்சிலிங்கில் முதலிடத்தைப் பிடித்தார். இவர், எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்வு செய்தார். விளையாட்டுப் பிரிவில், 100 இடங்கள், கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காக, விளையாட்டுப் பிரிவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 223 மாணவர்கள், கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். காலை 7.30 மணியில் இருந்தே மாணவர்கள் குவிய ஆரம்பித்தனர். தகுதியான மாணவர்கள் மற்றும் அவருடன் ஒருவரும், கவுன்சிலிங் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கவுன்சிலிங் துவங்கியதும், விளையாட்டுப் பிரிவில் முதல் இடம் பிடித்த, சென்னையைச் சேர்ந்த மாணவி அனகா அழைக்கப்பட்டார். இவர், மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரண்டிலும் சேர தகுதி இருந்தபோதும், பொறியியல் படிப்பை தேர்வு செய்தார். எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை, அனகா தேர்வு செய்தார். சர்ச் பார்க் பள்ளியில் படித்த இவர், ஸ்குவாஷ் வீராங்கனை. இவர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 10 சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று, பல்வேறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இரண்டாம் இடம் பெற்ற மாணவி மோனபிரியா, மருத்துவப் படிப்பை தேர்வு செய்துவிட்டதால், அவர் வரவில்லை. மூன்றாம் இடம் பெற்ற மாணவர் உசேன், அண்ணா பல்கலையில் மெக்கானிக்கல் பிரிவையும், நான்காம் இடம் பெற்ற சென்னை வேலம்மாள் பள்ளி மாணவி சவீதா, அண்ணா பல்கலையில், இ.சி.இ., பிரிவையும் தேர்வு செய்தனர். சவீதா, செஸ் வீராங்கனை. முதல் பத்து இடங்களில் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர், சேர்க்கைக்கான உத்தரவுகளை வழங்கினார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறும்போது, "விளையாட்டுப் பிரிவில் உள்ள, 100 இடங்களை நிரப்ப, 223 மாணவர்களை அழைத்துள்ளோம். விளையாட்டுப் பிரிவில் இடம் கிடைக்காதவர்கள், பொது கவுன்சிலிங்கில் அவர்களுக்குரிய, கட்-ஆப் மதிப்பெண் வரும் தேதியில் கலந்து கொள்ளலாம். பிளஸ் 2 மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாறுதல் அடைந்த மாணவர்களின் விவரங்கள், வழங்குவதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மதிப்பெண் வந்ததும், தரவரிசைப் பட்டியலில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் மதிப்பெண்களில் மாறுதல் செய்யப்படும் என்றார். தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று முதல், 6ம் தேதி வரை நடக்கிறது. 7ம் தேதி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. 8ம் தேதி முதல், பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடைபெறும். முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீட்டில், கரூரைச் சேர்ந்த சஞ்சீவ்குமாருக்கு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், கோவில்பட்டியைச் சேர்ந்த ஆஷிகா சரஸ்வதிக்கு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்