வேதியியலுக்கான நோபல் பரிசு; 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு
ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.இவ்விருது ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10 ல் வழங்கப்படும்.நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன், ரூ.10.41 கோடி வழங்கப்பட இருக்கிறது.ஏற்கனவே, மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியலுக்கான பரிசு பெறுபவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல் துறைகளைப் போன்றே, வேதியியலுக்கான விருதும், 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட இருக்கிறது.ஜப்பானின் சுசுமு கிடகாவா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவைச் சேர்ந்த ஒமர் எம்.யாகிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (அக்.,9) இலக்கியத்திற்கும், அக்.,10 அமைதிக்கும், அக்., 13 பொருளாதாரத்திற்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.முதல் நோபல் பரிசு!வேதியியலுக்கான முதலாவது நோபல் பரிசை 1901ம் ஆண்டு நெதர்லாந்தின் ஜாகோபியஸ் ஹென்ரிகஸ் வான் ஹொப் பெற்றுக்கொண்டார். அதேபோல, வேதியலுக்கான நோபல் விருதை இளம் வயதில் பெற்றவர் பெரிட்ரிக் ஜோலியோட். இவ்விருதைப் பெறும் போது இவரது வயது 35. மிக அதிக வயதில் வேதியலுக்கான நோபல் பரிசை 97வது வயதில் ஜான் பி குட்இனப் பெற்றது குறிப்பிடத்தக்கது.