உள்ளூர் செய்திகள்

பொறியியல் படிக்க ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் : எதிர்பார்ப்பு

தனியார் பொறியியல் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, கட்டண குழுவிடம் தனியார் கல்லூரி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான ஆண்டு கல்விக் கட்டணம் தற்போது 62 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேரும் மாணவர்களுக்கான கட்டணம், 32 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, கட்டணம் மாற்றி அமைக்க வேண்டும். அதன்படி, தற்போதுள்ள கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டதால், புதிய கட்டணத்தை நிர்ணயிக்க, நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில், பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங் துவங்க உள்ள நிலையில், கட்டண நிர்ணயக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், குழு உறுப்பினர்கள், 15க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து, கல்லூரிகளின் பிரதிநிதிகள் பேசினர். ஒவ்வொரு கல்லூரி பிரதிநிதிகளும், தாங்கள் எதிர்பார்க்கும் கட்டண விவரங்களை குறிப்பிட்டு, குழுத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதன்படி, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பலரும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, குழு வட்டாரங்கள் கூறும் போது, புதிய கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக, கல்லூரி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தோம். அவர்கள் எதிர்பார்க்கும் கட்டணம் குறித்து, கடிதங்கள் கொடுத்துள்ளனர். அதன் மீது ஆய்வு நடந்த பின், ஒரு முடிவு எடுக்கப்படும். அடுத்தடுத்த கூட்டங்களுக்கு பின், புதிய கட்டணம் குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும். இன்றைய கூட்டத்தில் எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்