கண்பார்வையற்றவர்களுக்கான பொறியியல் கல்லூரி
கண்பார்வையற்ற மாணவர்களுக்காக சிறப்பு பொறியியல் கல்லூரி ஒன்றை ஆந்திர மாநிலத்தில் துவக்க தேவ்நார் கண்பார்வையற்றவர்களுக்கான அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இது குறித்து அறக்கட்டளையின் நிர்வாகி சாய்பாபா கெளட் கூறுகையில், "எங்கள் அறக்கட்டளையில் உள்ள பல குழந்தைகள் பொறியியல் படிக்க விரும்புகின்றனர். எங்கள் மாணவர்களில் ஒரு பொறியியல் மாணவர் தற்போது நல்ல நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். 4 மாணவர்கள் தற்போது பி.டெக். படித்து வருகின்றனர். ஒருவர் எம்.ஐ.டி.யில் படித்து வருகிறார். இவர்களைப் பார்த்து இன்னும் பல மாணவர்கள் பொறியியல் படிக்க விரும்புகின்றனர். ஆனால், கண்பார்வையற்ற குழந்தைகள் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற மறுக்கப்படுகின்றனர். பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுத்தே பலரும் பொறியியல் படிப்பில் சேருகிறார்கள். இந்த பிரச்சினை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுகிறோம். இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம்தான் கண்பார்வையற்றவர்களுக்காக சிறப்பு பொறியியல் கல்லூரியை துவக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது. இக்கல்லூரியைத் துவக்க உரிய அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம். நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.