உள்ளூர் செய்திகள்

உற்சாகம் என்னும் ஜீவநதி!

முயற்சிச் சிறகுகளை அசைப்பதற்கு உற்சாகம் என்னும் உந்துசக்தி ஜீவநதியாக உள்ளத்தில் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். முனை இருக்கின்ற ஊசிதான் தைக்கும், அதுபோல முனைப்பு இருக்கின்ற முயற்சிதான் ஜெயிக்கும்; முனைப்போடு முயற்சிக்க உற்சாகம் என்னும் மின்சாரம் உள்ளமெங்கும் பரவ வேண்டும். என்னதான் இலட்சிய வேட்கையும் தன்னம்பிக்கையும் அறிவாற்றலும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருந்தாலும், அவற்றை இயக்கும் உற்சாகம் உயிரோட்டமாக இருக்க வேண்டும்; இதைத்தான் ‘சலியாத மனம்‘ என்று சொல்கிறார்கள். வாழ்க்கையில் சின்னசின்ன சருக்கல்கள் ஏற்படலாம், மேகங்களைப் போல தோல்விகள் சூழலாம், கிரணங்களைப் போல பின்னடைவுகள் பின்னுக்குத் தள்ளலாம். அவ்வாறான எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் முழுசத்தியையும் கொண்டு முயற்சிக்கும் மனதை உற்சாகத்தால் மட்டுமே உருவாக்க முடியும். முடியும்! முடியும்! எதையும் சாதிக்க முடியும்! தோல்வி என்னும் தடைக்கற்களையெல்லாம் வெற்றி படிகளாக்கி சாதனைச் சிகரங்களைத் தொட முடியும்! என்று எந்நேரமும் உள்ளத்தில் முழங்கிக் கொண்டே செயல்பட வைக்கும் உற்சாகத்தை, உங்களுடைய உயிர் மூச்சாக மாற்றிவிடுங்கள். வெற்றியின் வெளிச்சம் உங்களின் வாசலைத் தட்டும். உற்சாகமான மனநிலை எப்பொழுதும் இருப்பதற்கு சில யோசனைகள்: 1. உற்சாகம் கொடுக்கும் தன்னம்பிக்கைப் பாடல்களைக் கேளுங்கள். அத்துடன் அவ்வாரான பாடல்வரிகளை எப்பொழுதும் உள்ளத்தில் உலவவிடுங்கள். 2. நம்பிக்கையூட்டும் நூல்களை, எப்போழுதும் கையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது புரட்டி சில பக்கங்களையாவது வாசியுங்கள். 3. மனத்தளர்வு ஏற்படும்போது, தன்னம்பிக்கையூட்டும் நண்பர்களிடம் பேசுங்கள். 4. நம்பிக்கை நாற்றுக்களைப் பிடிங்கி வீசும் முட்டாள்களிடமிருந்து விவகிவிடுங்கள். 5. உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடைந்தால் கிடைக்கும் பாராட்டையும், புகழையும் அகக்கண்ணால் கண்டு மகிழுங்கள். மகிழ்ச்சியான மனமே மகிழ்ச்சியான சூழலை வெற்றி என்பது சின்னசின்ன முயற்சிகளின் ஒட்டுமொத்த பரிசாகும். ஆகவே, செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை உற்சாகத்தோடு செய்து மகிழுங்கள். ஒவ்வொரு நொடியிலும் வாழப்பழகுங்கள். வாழ்க்கை வசப்படும்! -முனைவர் கவிதாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்