குழந்தைகளுக்கு இலவச பயிற்சி
கோவை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்தொகை பெறும் குழந்தைகள் கல்லுாரியில் படிக்கும் போதே திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெறும் விதமாக, நவீன தொழில்நுட்ப இணையவழி பயிற்சி அளிக்கப்படுகிறது.அதன்படி, ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர், ஏ.ஐ., டேட்டா இன்ஜினியர்-வி2, கோர் ஜாவா, பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 40 பிரிவுகளில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு பிரிவை தேர்வுசெய்து கொள்ளலாம். வீட்டில் அல்லது கல்லுாரி விடுதியில் இருந்தோ ஸ்மார்ட்போன், லேப்டாப் வாயிலாக பயிற்சி பெறலாம்.ஆறு மாதம் வரை பயிற்சி வகுப்புகள் நடக்கும். நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ளும் குழந்தைகள் முறையாக பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ., போன்ற உயர்கல்விக்கான உதவித்தொகையை நலவாரியத்தில் விண்ணப்பித்து நடப்பாண்டில் பெற்றிருக்க வேண்டும்.அல்லது உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், https://registration.tnbocw.com/application என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் .கூடுதல் விவரங்களுக்கு, தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்), 1847, மகேந்திரா ஷோரூம் பின்புறம், ராமநாதபுரம் என்ற முகவரியிலும், 0422 2324988 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.