குடிமைப்பணிகள் தொகுதி 2, 2ஏ முதன்மை எழுத்து தேர்வு, வரும் 8ல் நடக்கிறது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 2, 2ஏ - முதன்மை எழுத்துத் தேர்வு வரும் 8ம் தேதி நடக்கிறது.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 2, 2ஏ- முதன்மை எழுத்துத் தேர்வு கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏ.கே.டி., நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் வரும் 8ம் தேதி காலை மற்றும் மதியம் நடக்கிறது.இத்தேர்வினை காலை 102 பேர், மதியம் 105 பேர் எழுதுகின்றனர். இத்தேர்வுக்கான கூடுதல் சிறப்பு பேருந்து வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு http://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வுக் கூடத்திற்கு காலை 8:30 முதல் 9:00 மணி வரை மற்றும் மதியம் 1:30 முதல் 2:00 மணிக்குள் வர வேண்டும். காலை 9:30 முதல் 12:30 மணி வரையிலும், மதியம் 2:30 முதல் 5:30 மணி வரையிலும் தேர்வு நடக்கும்.மேலும், காலை 9:00 மேல் மற்றும் மதியம் 2.00 மணிக்கு மேல் தாமதமாக வருபவர்கள் தேர்வு கூடத்திற்குள் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, தேர்வர்கள் ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு காலதாமதமாக வராமல் குறித்த நேரத்திற்கு முன்பு தேர்வு மையத்திற்கு வர வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.