உள்ளூர் செய்திகள்

கோவையில் 2,101 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வினியோகம்

கோவை: கோவை மாவட்டத்தில், 2,101 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டது; இவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணி நேற்று துவக்கி வைக்கப்பட்டது.ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அதைப்போக்க, ஊட்டச்சத்தை உறுதி செய் என்கிற திட்டம், தமிழகத்தில், 2022ல் துவக்கப்பட்டது.இவ்வகையில், கோவை மாவட்டத்தில், 2,101 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.அதில், குறைபாடு அதிகமுள்ள 532 குழந்தைகளுக்கு தலா இரண்டு பெட்டகம், மிதமான குறைபாடுடைய 1,569 குழந்தைகளுக்கு தலா ஒரு பெட்டகம் வீதம் மொத்தம், 2,633 பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளன.கோவை ரத்தினபுரியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், எம்.பி., ராஜ்குமார் ஆகியோர், 20 குழந்தைகளின் தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கினர். அதில், நெய் பாட்டில், புரோட்டீன் பவுடர், இரும்புச்சத்து டானிக், பேரீச்சம்பழம் பாக்கெட், சத்து மாத்திரை, கப் மற்றும் டவல் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.நிகழ்ச்சியில், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர் மீனா, நிலைக்குழு தலைவர்கள் மாரிச்செல்வன், சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) ஆண்டாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்