குலசேகரபட்டினம் ஏவுதளத்திற்கு 2200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
அவனியாபுரம்: துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் 2200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தமைக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா உலக நாடுகளில் முன்னணி நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது. வெளிநாடுகளின் செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.தற்போது தேவை அதிகரித்துள்ளதால் பூலோக ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை முடிவு செய்யப்பட்டது. அப்போது முதல்வராக பழனிசாமி இருந்தார். நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தேன். இஸ்ரோ வேண்டுகோள்படி குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்காக நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறோம் என்றார்.