உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் வசதிக்காக 50 அங்கன்வாடி மையங்களுக்கு மின்வசதி

முதுகுளத்தூர்: மாணவர்களின் வசதிக்காக, முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட, 50 அங்கன்வாடி மையங்களுக்கு, மின்வசதி செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய ஆணையாளர் குருநாதன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: முதுகுளத்தூர் ஒன்றியத்தில் நூறு பிரதான, 38 குறு அங்கன்வாடி மையங்கள் உள்ளன். இதில் குறு மையங்களில், சமையலர் இல்லாமல், பணியாளர் பணியுடன், சமையல் பணியையும் கூடுதலாக சேர்த்து கவனித்து வருகின்றனர். 138 அங்கன்வாடி மையங்களில் 78 சொந்த கட்டடங்களிலும், 52 வாடகை கட்டடத்திலும், எட்டு மையங்கள் அரசு சார்ந்த கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும்போது, மின்வசதியுடன் அமைக்கபட்டது. ஆனால் மின்கட்டமைப்பு முழுவதும், சேதமடைந்து, வெயில் காலங்களில் மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர். இதனால் சொந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் மின்வசதி இல்லாத 50 அங்கன்வாடி மையங்களுக்கு, ஒன்றிய பொது நிதியிலிருந்து, 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மின்வசதி ஏற்படுத்தபட்டுள்ளது. அங்கன்வாடியில் குழந்தைகள் சேர்க்கையை, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம மக்களுடன் இணைந்து தீவிரபடுத்த வேண்டும். கட்டடம், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லாத அங்கன்வாடி மையங்கள் கண்டறியபட்டு, அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யபடும். இதுகுறித்து ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் மையங்களுக்கு, விரைவில் கட்டட வசதியுடன், மின்வசதியும் ஏற்பாடு செய்யபடும் என, ஒன்றிய ஆணையாளர் குருநாதன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்