ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள்
சென்னை: குற்றவியல் சட்டப் பிரிவுகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.பாரதிய நியாய சன்ஹிதா 2023 (இந்திய நீதிச் சட்டம்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய சாக்ஷயா அதினியம் 2023 (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இச்சட்டங்கள் குறித்த ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (ஜூன் 25) நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான நாகமுத்து கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் பேசியதாவது:இந்த புதிய சட்டங்கள் பற்றிய செய்திகள் வெளியிடும் பொழுது பொறுப்புடனும், பொதுநலத்துடனும், கண்ணியத்துடனும் செய்திகளை வெளியிட வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்களை வெளியிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஜூன் 30-ம் தேதி இரவு வரை பதிவு செய்யப்படும் வழக்குகள் பழைய குற்றவியல் சட்டங்களின் கீழ் தான் பதிவு செய்யப்படும். ஜூலை 1-ம் தேதி அதிகாலை முதல் பதிவு செய்யப்படும் வழக்குகள் புதிய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும். மரண தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு புதிய சட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு குறிப்பிட்ட கால அளவு மட்டுமே சிறை தண்டனை விதிக்க புதிய சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் காலத்தின் தேவை.இவ்வாறு கூறினார்.இந்நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் லீனா மீனாட்சி, பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குநர் அருண்குமார், துணை இயக்குநர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் கௌரி ரமேஷ், டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் டீன் பாலாஜி மற்றும் 200-க்கும் அதிகமான சட்டக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.