1.91 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
திருவள்ளூர் : கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில், அரசு பள்ளி மாணவர்கள் 1.91 லட்சம் பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.திருவள்ளூர் மாவட்டத்தில் 984 தொடக்க பள்ளி, 257 நடுநிலை, 130 உயர்நிலை மற்றும் 119 மேல்நிலை என மொத்தம் 1,490 பள்ளிகள் உள்ளன. அப்பள்ளிகளில் 1,91,950 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பின், நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டது.ஒரு மாதத்திற்கு மேல் விடுமுறையில் இருந்த மாணவ - மாணவியர், நேற்று ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர். பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவ - மாணவியருக்கு விலையில்லா பாட புத்தகம், குறிப்பேடு, பேனா, சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.ஆவடி, சத்தியமூர்த்தி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப் பங்கேற்று துவக்கி வைத்தனர்.தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர். முதல் நாள் பள்ளிக்கு வராமல் விடுபட்டவர்களுக்கு, இனி வரும் நாட்களில் கல்வி உபகரணங்கள் வழங்கப்படும் என, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.