குரூப்-4 தேர்வு வினாத்தாளில் பக்கங்கள் மாறியதால் புகார்
துாத்துக்குடி: குரூப்- 4 தேர்வு வினாத்தாளில் பக்கங்கள் மாறி இருந்ததால் அதிர்ச்சியடைந்த பெண் டி.என்.பி.எஸ்.சி, தலைமையகத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.துாத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த செல்வி, 48, என்பவர், 12ம் தேதி நடந்த குரூப் - 4 தேர்வை எழுதினார். காமராஜ் கல்லுாரி மையத்தில் அவர் தேர்வு எழுதியபோது, ஒரு மணி நேரத்திற்கு பின் அவரது வினாத்தாளில் பக்கங்கள் மாறி இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.இதுதொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு கண்காணிப்பாளரிடம் செல்வி புகார் அளித்தார். அவர்கள் கூடுதலாக 15 நிமிடம் அவருக்கு ஒதுக்கி தேர்வு எழுத வைத்தனர். இதுதொடர்பாக, துாத்துக்குடி கலெக்டர் மற்றும் டி.என்.பி.எஸ்.,சி., தலைமை அலுவலகத்திற்கு அவர் புகார் மனு அனுப்பி உள்ளார்.