1,210 அரசுப் பள்ளிகளில் இன்டர்நெட் வசதி : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 210 அரசுப் பள்ளிகளுக்கு, இன்டர்நெட் வசதி அளிக்கும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்க உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், இணையதள வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து, 210 அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்தும் பணி, தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏற்கனவே, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஹைடெக் லேப்களில், இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏற்கனவே இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது, ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கும், இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய கற்றலை உருவாக்கும் வகையில், இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பணி நிறைவடையும், என்றார்.