ரூ.2,350 கோடியில் 145 உறைவிட பள்ளிகள்
பெங்களூரு: எஸ்.சி., - எஸ்.டி., - பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு, வரும் கல்வி ஆண்டு முதல், புதிதாக, 145 உறைவிட பள்ளிகளும், இரு மாணவர் விடுதிகளும் துவங்கப்படும், என, சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்சநேயா தெரிவித்தார். பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:எஸ்.சி., - எஸ்.டி., - பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாணவர்களுக்காக பாதுகாப்பான கட்டடம், தேவையான ஊழியர்கள் நியமனத்துடன், 145 உறைவிட பள்ளிகள் துவங்கப்படும். தலா, 100 மாணவர்கள் தங்கும் வகையில் இரு விடுதிகளும் கட்டப்படும். இதற்காக, 2,350 கோடி ரூபாய் செலவிடப்படும். முதற்கட்டமாக, உறைவிட பள்ளிகள், தனியார் கட்டடங்களில் துவங்கப்படும்; பின், அவை சொந்த கட்டடங்களுக்கு மாற்றப்படும். மாணவர் விடுதிகளும் தனியார் கட்டடங்களில் துவங்கி, பின், அவற்றுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும். பள்ளிகளுக்காக, 1,750 கோடி ரூபாயும், விடுதிகள் கட்டுவதற்காக தலா, 300 கோடி ரூபாயும் செலவிடப்படும். ஒவ்வொரு உறைவிட பள்ளியும், 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும். இங்கு பள்ளி கட்டடம் மட்டுமின்றி, ஊழியர்களுக்கு தங்கும் வசதி, விளையாட்டு மைதானம், தோட்டம் உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் செவிலியர்கள் நியமிக்கப்படுவர். இந்த பள்ளிகளுக்கு அடுத்த மே மாதத்துக்குள் கர்நாடகா அரசு பணி தேர்வாணையம் - கே.பி.எஸ்.சி., மூலம் ஆசிரியர்கள், ஊழியர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது; கே.பி.எஸ்.சி., ஒப்புக் கொள்ளாவிட்டால், மாற்று ஏற்பாடு செய்யப்படும்.மாணவர் விடுதிகளும், பாதுகாப்பான கட்டடத்தில் இயங்கும். இந்த உறைவிட பள்ளிகளுக்கு பெயர் சூட்டுவது பற்றி அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து, தீர்மானிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.