403 மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு: ராஜ்யசபாவில் தகவல்
இது தொடர்பாக வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன், ராஜ்யசபாவில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:கடந்த 2018 முதல் இதுவரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். அதில், கனடாவில் அதிகபட்சமாக 91 இந்திய மாணவர்கள் இறந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, பிரிட்டனில் 48, ரஷ்யாவில் 40, அமெரிக்காவில் 36, ஆஸ்திரேலியாவில் 35, உக்ரைனில் 21, ஜெர்மனியில் 20, சைப்ரஸ் நாட்டில் 14, இத்தாலி மற்றும் பிலிப்பைன்சில் தலா 10 மாணவர்கள் இறந்துள்ளனர்.மத்திய அரசு வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, இந்திய துாதர்கள் தொடர்ந்து பல்கலைகளுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். விபத்துகளில் சிக்கும் மாணவர்களுக்கு தேவையான அவசர மருத்துவ உதவி, தங்குமிடம் ஆகியவை துாதரகங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.