சென்னை: 'நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரில், இன்றைக்குள் வழக்குப்பதிவு செய்து, அது தொடர்பான அறிக்கையை, செப்.,2க்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, இன்ஸ்பெக்டருக்கு, தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில், அவதுாறாகப் பேசியதாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகி, சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், 'ஏற்கனவே அ.தி.மு.க., மேடைகளில் பாடப்பட்ட, கருணாநிதி குறித்த பாடலை பாடியதற்காக, சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளனர். அதே பாடலை நான் பாடுகிறேன். அந்தப் பாடலை எழுதியது வேறு யாரோ. அவர்கள் எழுதியதை பாடினோம்' எனக் கூறி, அந்தப்பாடலை பாடினார். அந்த பாடலில் இடம் பெற்றிருந்த ஒரு வார்த்தை, குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தெரிந்தே, அந்த வார்த்தையை பயன்படுத்தியதால், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அஜேஷ் என்பவர், சென்னை பட்டாபிராம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு எஸ்.சி., - எஸ்.டி., மாநில ஆணையத்தில், அவர் புகார் செய்தார். இதை விசாரித்த ஆணையம், நேற்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், இன்றைக்குள் அஜேஷ் புகார் மீது வழக்குப்பதிவு செய்து, அதற்கான நிலை அறிக்கையை, செப்.,2க்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என, பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.