உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாணவர்களிடையே உருவெடுக்கும் வன்முறை கலாச்சாரம்! புத்தகம் துாக்க வேண்டிய கரங்களில் அரிவாள் எடுப்பதை தவிர்ப்பது எப்படி?

மாணவர்களிடையே உருவெடுக்கும் வன்முறை கலாச்சாரம்! புத்தகம் துாக்க வேண்டிய கரங்களில் அரிவாள் எடுப்பதை தவிர்ப்பது எப்படி?

கோவை : தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் இடையே வன்முறை செயல்கள் அதிகரித்து வருகின்றன. பேனா, பென்சில் போன்ற சிறிய பொருட்களை பகிர்ந்துகொள்ளாத முரண்பாடுகளுக்கே, அரிவாளை கையில் எடுக்கும் அளவுக்கு, எட்டாம் வகுப்பு மாணவனின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதற்கு காரணமாக சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்கள் வன்கொடுமைகளை மெருகேற்றிக் காட்டுவதை சுட்டிக்காட்டலாம். வீட்டில் பெற்றோர் போதுமான நேரம் செலவிடாமல், பிள்ளைகளின் மனநிலையை கவனிக்கத் தவறுகிறார்கள். பள்ளிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் அமைப்புகள் சரிவர செயல்படுவதில்லை. மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் மரியாதை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் உளவியல் வகுப்புகள் தொடர்ச்சியின்றி நடைபெறுவதால் பயனளிப்பதில்லை. ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்க அதிகாரம் இல்லாதது முக்கிய தடையாக இருப்பதாக கருத்து நிலவுகிறது.

ஒழுக்கம் அவசியம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் அரசு கூறுகையில், ''வகுப்பில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களின் மனநிலை பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் 'ஆல் பாஸ்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால், படிப்பில் மாணவர்கள் முழு கவனம் செலுத்தாமல் உள்ளனர். 'படிக்கவில்லை என்றாலும் பாஸ் செய்து விடுவார்கள்' என்கிற எண்ணம், தவறான செயல்களுக்கு வழிவகுக்கிறது. மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்க அரசு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்புக்கு தயாராக இருக்கிறார்கள்,'' என்றார்.

கண்டிக்கும் அதிகாரம்

கோவை அனைத்து ஆசிரியர் சங்கத் தலைவர் ஆனந்த் குமார் கூறுகையில், ''அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை வகுப்புகள் சரிவர நடப்பதில்லை. பள்ளிகளில் மாணவர்களை கண்டிக்கத் தேவையான அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதால், ஒழுக்க சீர்கேடுகள் உருவாகின்றன. தற்போது பெற்றோர்களும் குழந்தைகளை கண்டிக்க தவறிவிடுகின்றனர். சமூக ஊடகங்கள், 'கூல் லிப்' பயன்பாடுகள் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அவை கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியம். தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில், அரசு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்குக் கண்டிக்கும் அதிகாரம் வழங்கவேண்டும்,'' என்றார்.

உளவியல் வகுப்பு இல்லை

உளவியல் ஆலோசகர் டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ''சமூகத்தில் வன்முறை கலாசாரம், சமூக ஊடகங்கள் வழியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போது, ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது கண்டனத்துக்குரியதாகக் கருதப்படுகிறது. இதனால், அவர்கள் மாணவர்களின் ஒழுக்க நடத்தை தொடர்பான விஷயங்களில் தலையிடுவதில்லை. மேலும், நீதி போதனை வகுப்புகள், போதுமான உளவியல் ஆலோசனை வகுப்புகள் இல்லாமை போன்ற காரணங்களால், மாணவர்கள் இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

theruvasagan
ஏப் 18, 2025 22:18

படிக்கும் பருவத்தில் அரசியலை புகுத்தி 50 வருடத்துக்கு முன்னாலேயே மாணவர்களை சீரழிக்கும் கலாசாரத்திற்கு வித்திட்டது திராவிஷ அரசியல். அது இன்று அசுரத்தனமாக வளர்ந்த விஷ விருட்சமாகி நிற்கிறது.


ஆரூர் ரங்
ஏப் 18, 2025 19:56

பெரும்பாலும் குடும்பத்தில் ஒரே மகன் என்பதால் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து கெடுப்பது பெற்றோர்கள்தான். ஒவ்வொரு வகுப்புக்கும் அதுபோன்ற ஒரு சில மாணவர்கள் இருந்தாலே போதும்.ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல.


Raj S
ஏப் 18, 2025 18:15

நீதிமன்றங்கள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்... ஒழுங்கா வேல செய்யாத நீதிபதிகளுக்கு கடுமையான தண்டனை குடுக்கணும்... அவங்க ஒழுங்கா வேல செஞ்சா பல அரசியல் வியாதிகளான திராவிடர்கள் ஜெயில்ல இருக்கணும், அப்படி நடந்திருந்தா இந்த மாதிரி எல்லாருக்கும் தப்பு செய்ய தைரியம் வராது...


Ramesh Sargam
ஏப் 18, 2025 13:13

பாழாப்போன சினிமாப்படங்கள், டிவி சீரியல்கள், மொபைல் gamegal இவைகளை பார்த்துப்பார்த்து இந்த காலத்து இளைஞர்கள் மிக மிக கெட்டுப்போயிருக்கின்றனர். பிள்ளைகளை வீட்டில் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். பள்ளிகளில் ஆசிரியர், ஹெட்மாஸ்டர் முதற்கொண்டு மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். தினமும் ஒரு அரை மணி நேரமாவது மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, நல்லவைகளை போதிக்கவேண்டும்.


Thanappankathir
ஏப் 18, 2025 12:58

நீதி போதனை வகுப்புகள் வாரம் ஒருமுறையும் மனநல ஆலோசனைகள் வாரம் ஒருமுறையும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் வன்முறை ஆபாச சித்தரிப்பு போன்றவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்


MUTHU
ஏப் 18, 2025 09:19

பெரிய பெரிய மீசை வைத்து கைகளில் நீளமாய் பட்டாக்கத்தி வைத்து கண்கள் தெறித்து வெளியில் வந்து விடுவது போன்ற பழைய மன்னர்கள் பேனர் போஸ்டர் முதலானவற்றை திருவிழாக்களில் தடை செய்ய வேண்டும். ரொம்ப கோபக்காரர்களாம்.


தமிழ்வேள்
ஏப் 18, 2025 08:44

திராவிடம் சாதிவெறி தமிழ் சினிமாவை ஒழிக்காமல் அரிவாள் கலாச்சாரம் ஓயாது. கூலிப்படை பெருக தென்மாவட்டங்களில் தொழில் விவசாயம் வளர்ச்சி இன்மை முதன்மை காரணம்.. தென்மாவட்டங்கள் வரக்கூடாது என்பதே திராவிட மறைமுக சித்தாந்தம்...தென்மாவட்டங்கள் தனி மாநிலமாக பிரிந்தால்தான் அந்த மாவட்ட மக்களுக்கு தங்கள் பின்தங்கிய நிலை உறைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வரும். வளர்ச்சிக்கான முன்னெடுப்பு இருக்கும்.. இல்லை என்றால் வட தமிழகம் மட்டுமே வளரும். தென் தமிழ்நாடு அடியாள் வேலை பார்த்து புளகாங்கிதம் அடையும்..ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகுதான் தெலங்கானா வளர்ச்சி அடைந்தது..அது வரை நக்சலைட் பகுதியாக மட்டுமே இருந்ததை ஆந்திரர்கள் தெலுங்கானாவை சுரண்டி கொழுத்ததையும் எண்ணிப்பார்க்க வேண்டும்....


PARTHASARATHI J S
ஏப் 18, 2025 06:27

எது எதற்கோ இலவசம். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வீச்சறிவா இலவசமா தரலாம். இரும்பு பிசினஸ் ஒஹோன்னு போகும். ஜல்லிக்கட்டு நடக்கும் தமிழகத்தில் இதையும் ஒரு விளையாட்டாக கருதலாம். யாராவது கோர்ட்ல் கேஸ் போட்டால் தீர்ப்பு வர பத்து வருடங்கள் ஆகலாம். ஸ்டாலினோடு சேர்ந்து நாமும் வேடிக்கை பார்க்கலாம்.


புதிய வீடியோ