சென்னை: ''மாம்பழம் சின்னமும், 'பி' படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரமும் எனக்குதான் உள்ளது. அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார். பா.ம.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னையை அடுத்த அக்கரையில் நடந்தது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 17ல் நடக்கவுள்ள சிறை நிரப்பும் போராட்டம், சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அன்புமணி பேசியதாவது: வாழ்க்கை முழுதும் பா.ம.க.,வுக்கும், ராமதாசுக்கும் உண்மையாகத்தான் உழைத்தேன். இனிமேலும் அப்படித்தான் உழைப்பேன். இப்போது ஒரு மோசமான சூழல் உருவாகி விட்டது. அந்த சூழ்நிலையில் தான் மக்களை சந்திக்க நடைபயணத்தை துவங்கினேன். இந்த பயணத்தில், பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ராமதாசுடன் இருக்கும் தி.மு.க., கைக்கூலிகள் தங்களின் சுயநலத்திற்காக, அவரது பெயரை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். பா.ம.க., தலைவராக என்னை அங்கீகரித்து, மாம்பழம் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது; அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது. கட்சி வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும், 'ஏ, பி' படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்குத் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். *** புல் அவுட்: பா.ம.க., - மா.செ.,க்கள் அமைச்சர்களாவர் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில், பா.ம.க.,வினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும், அதில் விடுபட்டவர்களை சேர்க்க வேண்டும். இன்னும் 108 நாட்களில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மா.செ.,க்கள் கூட்டத்துக்கு வந்திருப்போரில் சிலர், அடுத்த சில மாதங்களில் எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக மாற இருக்கின்றனர். தேர்தல் நேரத்தில் பா.ம.க.,வினரான நாம், கோட்டை விட்டு விடுகிறோம்; அதை தொடரக்கூடாது. பா.ம.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, வீடு வீடாகச் சென்று விளக்க வேண்டும். பா.ம.க., சார்பில், 200 இளம் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். அன்புமணி, தலைவர், பா.ம.க.,