சென்னை : 'இறைச்சியை நான்கு மணி நேரம் மட்டுமே திறந்த வெளியில் வைத்திருக்கலாம்; அதற்கு மேல் வைத்திருந்தால், நுண்ணு யிர்கள் தாக்கி கெட்டு விடும்' என, கால்நடை டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.'தட்டுக்கு வருவதெல்லாம் கெட்டுப்போன இறைச்சியா?' என்ற தலைப்பில் நேற்று செய்தி வெளியானது. அதில், 'இறைச்சிக் கூடங்களில் வெட்டப்பட்டு விற்பனைக்கு வரும் ஆட்டிறைச்சி, 12 மணி நேரம் வரை கெட்டுப்போகாது' என, ஆட்டிறைச்சி வியாபாரி சங்கத் தலைவர் கூறியிருந்தார். இந்த தகவல் தவறானது; நான்கு மணி நேரத்திற்கு மேல் திறந்த வெளியில் இருந்தால், இறைச்சி கெட்டு விடும் என, கால்நடை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, கால்நடை மருத்துவக் கல்லுாரி இறைச்சி மற்றும் அறிவியல் துறை தலைவர் நரேந்திரபாபு கூறியதாவது:ஆடு, மாடு உள்ளிட்ட இறைச்சிகளை திறந்த வெளியில் வைத்திருந்தால், 12 மணி நேரம் வரை தாங்கும்; கெட்டுப்போகாது என்பது தவறானது. வியாபாரிகள் தண்ணீர் தெளித்து, இறைச்சி ஈரத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதால், 12 மணி நேரம் வரை நல்ல இறைச்சி என்று நினைக்கின்றனர். ஆனால், நான்கு மணி நேரம் மட்டுமே இறைச்சி தாங்கும். அதன்பின், நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகரித்து கெட்டு விடும். எனவே, இறைச்சியை, 24 மணி நேரத்திற்குள் விற்பனை எனில், 0 டிகிரி குளிர்நிலையிலும்; அதற்கு மேற்பட்ட நாட்கள் என்றால், மைனஸ் 18 டிகிரி உறைநிலையிலும் வைத்து, வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும். நுண்ணு யிர்கள் நிறைந்த இறைச்சியை, 72 டிகிரி வெப்பநிலையில் வேக வைத்து சாப்பிட்டாலும், உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.சென்னை மாநகராட்சி சுகாதார நல அலுவலர் ஜெகதீசன் கூறுகையில், ''இறைச்சியை திறந்த வெளியில் வைத்தால், 12 மணி நேரம் வரை தாங்காது; நான்கு மணி நேரம் தான் தாக்கு பிடிக்கும். அதன்பின், நுண்ணு யிரிகள் பெருக்கம் அதிகரிக்கும். ''அத்தகைய இறைச்சியை என்ன தான் அதிக வெப்பநிலையில் சமைத்து சாப்பிட்டாலும், உடல்நல பாதிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது,'' என்றார்.