திருப்பூர் : ஆளும் கட்சி நிர்வாகிகள் பரிந்துரைப்படி ரேஷன், சத்துணவு ஊழியர் பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேலைக்காக காத்திருக்கும் தகுதியுள்ளவர்களும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், கட்சி தலைவரான முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. கட்சியினருக்கு எதுவும் செய்து தர முடியவில்லை என்ற ஆதங்கத்தை, மாவட்டச் செயலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
'அடுத்தாண்டு தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், கட்சியினர் மனதில், எதிர்மறை கருத்துகளும் பதிந்து விடக்கூடாது. கட்சியினரை திருப்திப்படுத்தும் வகையில், அரசு தரப்பில் அவர்களுக்கு தேவையானதை செய்து தரப்படும்' என கூட்டத்தில் தெம்பூட்டப்பட்டது.ரேஷன் கடைகள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றில் மாவட்ட செயலர்கள் பரிந்துரைகளை ஏற்று பணி வழங்கவும், உரிய துறை அமைச்சர்கள் தங்கள் துறையில் உள்ள காலியிட விபரங்களை பெற்றுத்தரவும் அறிவுறுத்தப்பட்டது.காலியிடங்கள் குறித்த விபரங்களை அதிகாரிகள் வெளியிடாமல் ரகசியமாக வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதில் உரிய தீர்வு கண்டு கட்சியினருக்கு 'தேவை'யானதை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். அதிகாரிகள் அதிர்ச்சி ஏன்?
'பணி நியமனங்களில் ஆளும் கட்சியினர் தலையீடு அதிகரிக்கும். இது அதிகாரிகள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுதியுள்ள நபர்களுக்கு பணி வழங்க விரும்பும் அதிகாரிகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக இது அமையும். அதேசமயம், சில பகுதிகளில் அதிகாரிகளின் திருவிளையாடல்களும் அம்பலமாகும் நிலையும் உள்ளது.'சில மாவட்டங்களில் ரேஷன் கடைகள், சத்துணவு மையங்களில் ஊழியர்கள் நியமிக்க துறை சார்ந்த அதிகாரிகள், 3 முதல் 10 லட்சம் ரூபாய் வரை இடம் மற்றும் ஆளுக்கு ஏற்ப பெற்றுக் கொண்டு பணி உத்தரவு வழங்க தயார் நிலையில் உள்ளனர். 'ஆளும் கட்சி நிர்வாகிகள் பரிந்துரைக்கு பணி வழங்க வேண்டும் என்றால், கை நீட்டி வாங்கிய பணத்துக்கு பதில் சொல்ல வேண்டும். கட்சியினர் தங்கள் பாட்டுக்கு ஒரு வழியில் வசூல் செய்து தங்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்வர். 'இதனால், 'வசூல்' அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். வேலைக்காக அதிகாரி களுக்கு பணம் கொடுத்த அப்பாவிகள் நிலை சற்று பரிதாபமாகத் தான் உள்ளது' என்கின்றனர் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர்.
வரப்பிரசாதமாக அமைந்த பணியிடங்களும், கோலோச்சும் முறைகேடுகளும்
தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசு அலுவலர்கள் பதவி தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. நேரடி பணி நியமனமாக உள்ள ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர், அங்கன்வாடி பணியாளர், கொசு ஒழிப்பு பணியாளர் போன்ற பணிகள் ஆட்சியில் உள்ள கட்சியினருக்கும், அந்த துறை அதிகாரிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது.இப்பணிகளுக்கு மாவட்ட வாரியாக காலியிடங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் கீழ், விண்ணப்பம் பெற்று, நேர்காணல் நடத்தி நியமிக்கப்படும். ஆட்சி நடத்தும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் தங்கள் கட்சியினரை திருப்திப்படுத்தவும், ஒரு தொகையை கையூட்டாகப் பெற்றுக் கொண்டும் இப்பணிகளுக்கு ஆட்களை பரிந்துரை செய்வது வழக்கம். ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில் ஐந்தாமாண்டில் தான் பெரும்பாலும் இந்த நியமனங்கள் நடத்தப்படும். இது அடுத்து வரவுள்ள தேர்தலில் ஓட்டு வங்கியாகவும் ஆளும் கட்சிக்கு உதவும்.இந்த நியமனங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியினர் மற்றும் நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட மாவட்ட அளவிலான அதிகாரிகள் இடையே 'மறைமுக' ஒப்பந்தம் ஏற்படுத்தி, பணியிடங்களை பிரித்துக் கொள்வர். காலியிடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையை முறையாக நியமித்தும், மீதமுள்ள பணியிடங்களை இரு தரப்பினரும் பிரித்தும் நியமிப்பர்.இந்த முறை கட்சியினருக்கு 'அல்வா' கொடுக்கும் வகையில், பதவியில் உள்ள அதிகாரிகள் இந்த நியமனங்களை தாங்களாகவே செய்து கொள்ளும் வகையில் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.கட்சி நிர்வாகிகள் ஒரே பணியிடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்டோரை பரிந்துரை செய்வது; குறைந்த பட்ச தகுதி கூட இல்லாதவர்களுக்கு பரிந்துரைப்பது; அதிகாரிகள் பெயரில் வசூல் செய்வது போன்ற பிரச்னை உள்ளது. இது தவிர கட்சி நிர்வாகிகளுக்கு இது குறித்தெல்லாம் பெரிய அளவில் விபரம் போதாது; கட்சியில் அடுத்த நிலையில் உள்ள நிர்வாகியின் பெயரைப் பயன்படுத்தி தப்புவது போன்ற பல தகிடுதத்தங்கள் உள்ளன. இதை மனதில் கொண்டு தான், சென்னையில் நடந்த கூட்டத்தில், காலியிட விபரங்கள் குறித்த விபரங்களைக் கூட அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவிப்பதில்லை என்று கூட கட்சி நிர்வாகிகள் புகார் கூறியதாகத் தெரிகிறது.