சந்தனக்கட்டை சில்லரை விற்பனையை வனத்துறை நிறுத்தியதால் தட்டுப்பாடு
தமிழகத்தில் வனத்துறை சார்பில் சந்தன மரக்கட்டை சில்லரை விற்பனை, 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தேவையை பூர்த்தி செய்ய, உடனடியாக சந்தனக்கட்டை சில்லரை விற்பனையை அரசு துவங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், சேலம், திருப்பத்துார், சத்தியமங்கலம் பகுதிகளில் சந்தன மரக்கிடங்குகள் உள்ளன. இங்கு கடத்தல் கும்பலிடம் பறிமுதல் செய்த சந்தன மரங்கள், விவசாயிகளிடம் வளர்த்து வெட்டப்பட்ட மரங்கள், வனங்களில் வெட்டப்பட்ட மரங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இக்கிடங்குகளில், சோட்லக், சட்பட்லா, ஜஜ்போகல், சிறப்பு ஜஜ்போகல், மின்வாசில்டா உள்ளிட்ட 16 வகையான சந்தனமரக் கட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சேலம் அஸ்தம்பட்டி சந்தனக் கிடங்கில் மட்டும், 300 டன்களுக்கும் மேல் சந்தனக் கட்டைகள் உள்ளன.இவற்றில் நீதிமன்ற வழக்கில் நிலுவையில் உள்ளவை தவிர்த்து, மற்ற சந்தனக் கட்டைகளை மொத்த ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் எடுத்து வருவதாகக் கூறினாலும், ஏலம் நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. பக்தர்கள் தவிப்பு
கடந்த 2015 வரை வனத்துறை சார்பில், சந்தனக் கட்டைகள் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மாவட்ட வன அலுவலர் அளவில், 500 கிலோ வரை விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கோவில்கள் பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு இவை பயனுள்ளதாக இருந்தது.பல இடங்களில் ஏற்பட்ட புகார்கள், நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, சந்தனமரக் கட்டை சில்லரை விற்பனையை, வனத்துறை 2015 ஆகஸ்ட் முதல் நிறுத்தியது. பத்தாண்டுகளாகியும் சில்லரை விற்பனை துவங்கப்படவில்லை. இதனால், சிறிய அளவில் சந்தனக்கட்டை தேவைப்படும் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கோவில்களில் பூஜை, சந்தனக்காப்பு, அபிஷேகம், யாகம் என, அனைத்துக்கும் சந்தனம் தேவைப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்வரை, தமிழக அரசு வனத்துறை, சில்லரை விற்பனையாக சந்தனக்கட்டைகளை வழங்கியது. தரமான கட்டைகளை நம்பி வாங்க முடிந்தது. போலிகள்
தற்போது வனத்துறை விற்பனை செய்யாததால், தனியார் வியாபாரிகளிடம் சந்தனக் கட்டைகள் வாங்க வேண்டியுள்ளது. அதன் தரம், விலை ஆகியவற்றில், பல்வேறு குளறுபடி உள்ளது. பல இடங்களில் போலிக் கட்டைகளை வாங்கி ஏமாந்து வருகின்றனர். ஒரு கிலோ சந்தனக் கட்டைக்கு, 20,000 ரூபாய்க்கு மேல் தர வேண்டியுள்ளது.பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் அதிகாரப்பூர்வமாக அரசு வனத்துறை சார்பில், சந்தனக் கட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் சந்தனக் கட்டைகள் இருப்பு இருந்தாலும், அவற்றை மொத்த ஏலத்துக்கு மட்டுமே விற்க நடவடிக்கை எடுப்பதாகக் காரணம் கூறுகின்றனர். மீண்டும் வனத்துறை சந்தனக் கட்டை சில்லரை விற்பனையை துவக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
நீதிமன்ற வழக்கு ஏன்?
சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆந்திராவைச் சேர்ந்த குப்தா, 1996 ஜூனில் நடந்த ஏலத்தில் பங்கேற்றபோது, 64.2 டன் சந்தனக் கட்டைகளை, 3.68 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இதற்கு, 2 சதவீத மத்திய வரி கட்டுவதாக தெரிவித்தார். மாநில வரி, 12.5 சதவீதம் செலுத்த அறிவுறுத்தினோம். அவர் மறுத்து, 1997ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2007ல் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதை எதிர்த்து வன நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட, அதிலும் குப்தாவுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதுவும் ஏற்கப்படாமல், மாவட்ட வனத்துறையால் மேல்முறையீடு செய்யப்பட்டது.இதனால், 'எனக்கு சந்தனக் கட்டைகள் வழங்கப்படாமல் ஏலம் நடத்தக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் குப்தா வழக்கு தொடுத்தார். இந்த விவகாரத்தால், 2014 ஜூலையில் சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் ஏலம் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதேபோல், திருப்பத்துாரில், 1998ம் ஆண்டு சந்தனக் கட்டை வாங்கியது தொடர்பாக, குப்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அங்கும், 2014 ஜூலையில் ஏலம் நிறுத்தப்பட்டது. இதனிடையே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -