சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், கடலுார் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தனித்து போட்டி
குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், கடலுார், சிதம்பரம் உள்ளிட்ட சட்டசபை தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.இது குறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:கட்சியின் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க செய்யவும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும் சீமான் தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியா அல்லது அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேர்வதா என்பது குறித்து, கட்சியினரிடம் சீமான் கருத்து கேட்டு வருகிறார். தற்போது, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் வியூகத்தை தான் வகுத்துள்ளார். இதில், 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்து உள்ளார். தேர்தல் முடிவுக்கு பின், நா.த.க., ஆதரவு பெற்ற கட்சியே ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், அதிலும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுகள் அடிப்படையில், 25 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற திட்டமிடப்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வு
சிவகங்கை 16,81 சதவீதம்; மானாமதுரை 16.20; ராஜபாளையம் 15.91; ஓட்டப்பிடாரம் 15.88; ஆலங்குடி 15.88; வேதாரண்யம் 15.46 சதவீதம் என, ஆறு தொகுதிகளில் நா.த.க.,வுக்கு, 15 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் கிடைத்துள்ளன.அதேபோல், வாசுதேவநல்லுார், திருமயம், காரைக்குடி, திருப்பத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர், திருவையாறு, பாபநாசம், திருவொற்றியூர், திருவாரூர், துாத்துக்குடி, சிவகாசி, பூம்புகார், நன்னிலம், நாகப்பட்டினம், விளாத்திக்குளம், ஒரத்தநாடு உள்ளிட்ட தொகுதிகளில் 12 சதவீதம் ஓட்டுகள் கிடைத்துள்ளன. இந்த தொகுதிகள் உள்ளிட்ட 25 மட்டும் 'டார்கெட்' செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நிறுத்த தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் சீமான் ஈடுபட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.