புதுடில்லி: இந்தியா-துருக்கி இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும், சிலவற்றை முடிவுக்கு கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நம் விமான நிலையங்களில் உயர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் துருக்கியின், 'செலிபி ஏவியேஷன்' நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. மேற்காசிய நாடான துருக்கி-இந்தியா இடையே, பல்வேறு துறைகளில் இணக்கமான வர்த்தகம் நடக்கிறது. கட்டுமான துறை, தகவல் தொழில்நுட்பம், மெட்ரோ ரயில், சுரங்கப் பணிகள் உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளன.கடந்த நிதியாண்டில் மட்டும், 86,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியா-துருக்கி இடையே வர்த்தகம் நடந்துள்ளது. குஜராத், மஹாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், டில்லி உள்ளிட்ட இடங்களில் துருக்கி நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன.தற்போது இந்த நிலைமையில் தலைகீழ் மாற்றம் உருவாகி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை துருக்கி அளித்தது அம்பலமாகி உள்ளது.பாக்., ராணுவம் நம் மீது ஏவிய ட்ரோன்களில், துருக்கி நாட்டின், 'அசிஸ்கார்டு சோங்கர்' வகை ட்ரோன்கள் இருந்ததை, நம் ராணுவ கர்னல் சோபியா குரேஷி உறுதிபடுத்தினார்.ட்ரோன்கள் மட்டுமின்றி அவற்றை இயக்க, 'ஆப்பரேட்டர்'களையும் துருக்கி அனுப்பி வைத்தது உறுதியாகி உள்ளது.இதனால், துருக்கி உடனான வர்த்தக உறவை மறுஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து மத்திய வர்த்தக துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:துருக்கி உடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்கள், திட்டங்கள் மறுமதீப்பீடு செய்யப்படும். நீண்ட காலத்துக்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது. தற்போதுள்ள புவிசார் அரசியல் நிலைமையே அதற்கு காரணம்.பயங்கரவாதத்துக்கு நேரடியாக ஆதரவு அளிக்கும் துருக்கியின் நிலைப்பாட்டால், முதலீட்டு வளர்ச்சி மற்றும் வருங்கால வர்த்தக ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, நம் நாட்டில் ஒன்பது விமான நிலையங்களில் பயணியர் மற்றும் போக்குவரத்து சேவைகளை கையாண்டு வந்த துருக்கி நாட்டின், 'செலிபி ஏவியேஷன்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனுமதியை சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகம் நேற்று அதிரடியாக ரத்து செய்தது.
'செலிபி ஏவியேஷன்' பின்னணி என்ன?
'செலிபி ஏவியேஷன்' பின்னணி குறித்து ராணுவ ஆய்வாளர் அபிஜித் மித்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாம் நினைப்பதை விட இது மிக தீவிரமான பிரச்னை. இந்த நிறுவனத்தின், 10 சதவீத பங்கு துருக்கி அதிபர் எர்டோகனின் மகள் சுமய் எர்டோகன் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.இவரது கணவர் பெயர் செல்சுக் பைரக்டர். இவர், 'பைரக்டர் ட்ரோன்' தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர். இந்த ட்ரோன்களையும் இந்தியாவுக்கு எதிராக பாக்., பயன்படுத்தியது.மேலும், டில்லியில் உள்ள வி.வி.ஐ.பி.,க்களுக்கான விமானங்களின் தொழில்நுட்ப பகுதிகளை, 'செலிபி ஏவியேஷன்' தான் கையாள்கிறது. பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.,க்களின் விமானங்கள் இங்கு தான் நிறுத்தப்படுகின்றன. இதில் உள்ள ஆபத்தை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.'காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இந்த நிறுவனத்துக்கான பாதுகாப்பு ஒப்புதலை அளித்தது. இதன் வருகையை, சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கங்களும் அப்போதே கடுமையாக எதிர்த்தன' என, விமானத்துறை ஆலோசகர் சஞ்சய் லாஸர் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு துணை நிற்போம் துருக்கி அதிபர் மீண்டும் உறுதி
இந்தியா உடனான சண்டையில் ஆதரவு அளித்ததற்காக, துருக்கி அதிபர் எர்டோகனுக்கு பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சமூக வலைதளம் வாயிலாக நன்றி தெரிவித்து இருந்தார். அதற்கு துருக்கி அதிபர் எழுதிய பதிலில், பாக்., பிரதமரை சகோதரர் என்றே குறிப்பிட்டு இருந்தார். அதில், 'பாகிஸ்தானின் நல்ல காலத்திலும், கெட்ட காலத்திலும் துருக்கி துணை நிற்கும். உண்மையான நட்புக்கு நாங்கள் தான் மிகச்சிறந்த உதாரணம். துருக்கி-பாக்., நட்பு நீடூழி வாழ்க' என, பதிவிட்டிருந்தார்.