புதுடில்லி :வக்ப் சட்டத் திருத்த மசோதாவில் பா.ஜ., வழிக்கு, அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை வந்தது எப்படி என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fregu0z8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மூன்றாவது முறையாக பா.ஜ., வென்று ஆட்சியை கைப்பற்றினாலும், தனிப்பெரும்பான்மை பெறவில்லை. இடைவிடாத முயற்சி
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவு முக்கியமாக தேவைப்பட்டது. இதனால், அரசின் முக்கியமான மசோதாக்களுக்கு ஆதரவு அளிப்பதில் இந்த இரண்டு கட்சிகளும் பா.ஜ.,வுடன் மோதலை பின்பற்றும் என, எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இரு கட்சிகளுமே லோக்சபாவில் வக்ப் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்ததுடன், அதை ஆதரித்தும் பேசின. இரண்டு கட்சிகளுமே பெரிய அளவில் முஸ்லிம்களின் ஆதரவை நம்புபவை. மேலும், பொது சிவில் சட்டம் போன்றவற்றில் பா.ஜ.,வுடன் முரண்பட்டவை. அப்படி இருக்கும்போது, வக்ப் சட்டத்தை அவை ஆதரித்தது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பின்னணியில் அவர்களை சமரசம் செய்ததில் பா.ஜ., மூத்த தலைவர்களின் இடைவிடாத முயற்சி இருந்தது தெரியவந்துள்ளது. 14 திருத்தங்கள்
அது பற்றிய தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: வக்ப் மசோதாவை அறிமுகம் செய்ய, கடந்த ஆண்டு ஆகஸ்டில் முடிவு செய்ததும், அதற்கு முன்பாக, தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு; ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ்குமார் ஆகியோரிடம் வக்ப் மசோதாவின் முக்கியத்துவம் குறித்து பா.ஜ., மூத்த அமைச்சர்கள் விளக்கினர்.சிறிய கூட்டணி கட்சிகளான லோக் ஜனசக்தியின் தலைவர் சிராக் பாஸ்வான், ராஷ்ட்ரீய லோக்தள் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஆகியோரிடமும் விரிவாக எடுத்துக் கூறினர். இந்த மசோதாவின் நோக்கமானது, எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவது போல இருக்காது என்றும், முஸ்லிம்களின் நலன்களை பாதுகாப்பதோடு, முஸ்லிம் பெண்களின் உரிமைகளை உறுதி செய்யும் என்பதை குறிப்பிட்டும் மசோதாவின் அவசியத்தை விவரித்தனர். எனினும், வக்ப் வாரியத்தின் தற்போதைய சொத்துக்கள் மற்றும் மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்பாக சில சந்தேகங்களை அக்கட்சிகள் எழுப்பின. மசூதி, வழிபாட்டு தலங்களில் தலையிடும் வகையில், புதிய சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என, ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியது. இந்த சூழ்நிலையில், பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது. அந்த குழுவின் கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகள் குறிப்பிட்ட, 14 முக்கிய திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதுபோல, நிலம் என்பது மாநில விவகாரம் என்பதால் வக்ப் நிலங்கள் பற்றிய முடிவு, மாநில அரசிடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது. கால அவகாசம்
மாநில சுயாட்சியை பேணுவதோடு, நில தகராறுக்கு தீர்வு காண, ஆட்சியருக்கு மேலான மூத்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும், வக்ப் ஆவணங்களை போர்ட்டலில் ஏற்ற கால அவகாசம் தர வேண்டும் எனவும் தெலுங்கு தேசம் வலியுறுத்தியது. இதன் பின், திருத்தங்களுடன் கூடிய வக்ப் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. லோக்சபாவில் மசோதாவை நேற்று முன்தினம் தாக்கல் செய்வதற்கு முன்பு கூட, இரு கட்சிகளின் தலைவர்களை பார்லிமென்ட் வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசினார்.இதனால் தான், இரண்டு கட்சிகளின் தலைவர்களும் வக்ப் மசோதாவை ஆதரித்து பார்லிமென்டில் பேசினர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.